வீட்டில் அழுகிய நிலையில் ஓட்டல் மேலாளர்

by Staff / 20-02-2023 12:25:24pm
வீட்டில் அழுகிய நிலையில் ஓட்டல் மேலாளர்

திருவட்டார் அருகே உள்ள ஆற்றூர் புல்லாணிவிளையை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது45). ஒரு ஓட்டலில் மேலாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காணமாக மனைவி ராஜேசை விட்டு பிரிந்து குழந்தைகளை அழைத்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். அதன்பின்பு ராஜேஷ் தனது தாய் தங்கத்துடன் வசித்து வந்தார்.

மேலும் மனைவி பிரிந்து சென்ற பின்னர் சரியாக வேலைக்கு செல்லாமல் மது பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் ராஜேசின் தாயார் தங்கம் உடல் நிலை சரியில்லாததால் கடந்த 4 மாதங்களாக திருநந்திக்கரையில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தநிலையில், கடந்த சில தினங்களாக ராஜேசின் வீடு பூட்டப்பட்டு இருந்தது. நேற்று வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் திருநந்திக்கரையில் தங்கியிருந்த ராஜேசின் தாயார் தங்கத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர் வீட்டில் வந்து கதவை திறந்து பார்த்த போது ராஜேஷ் வீட்டின் முன்புற அறையில் உள்ள ஷோபாவில் இறந்த நிலையில் கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் கிடந்தது. இதனால் இறந்து 5 நாட்கள் வரை ஆகியிருக்கலாம் என தெரிகிறது.

இதுகுறித்து திருவட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via