சாலையில் தீப்பிடித்து எரிந்த கார்

by Staff / 09-03-2023 02:13:26pm
சாலையில் தீப்பிடித்து எரிந்த கார்

சென்னையைச் சேர்ந்தவர் சிவசண்முகம் (62). இவர் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நகராட்சி கமிஷனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது மனைவி சாந்தியுடன், நேற்று முன்தினம் கரூரில் உள்ள தனது விவசாய தோட்டத்தை பார்ப்பதற்காக, காரில் சென்னையில் இருந்து வந்தார். காரை சென்னையை சேர்ந்த டிரைவர் பொன்ராம் என்பவர் ஓட்டி வந்தார். சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில், புதுச்சத்திரம் அடுத்த தாத்தையங்கார்பட்டி பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, திடீரென காரின் முன்பக்கத்தில் இருந்து புகை வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் பொன்ராம், உடனடியாக சாலையோரம் காரை நிறுத்தினார். இதையடுத்து சிவசண்முகம், சாந்தி மற்றும் பொன்ராம் ஆகியோர், காரை விட்டு கீழே இறங்கினர். அடுத்த சில நிமிடங்களில் கார் தீப்பிடித்து எரிந்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென கார் முழுவதுமாக பற்றி, முழுவதுமாக எரிந்து போனது. இதுகுறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த புதுச்சத்திரம் போலீசார், விபத்து குறித்து வழக்குபதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via