ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் தி. மு. க. பிரமுகர் உள்பட 4 பேர் கைது

by Staff / 18-05-2023 03:20:36pm
ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் தி. மு. க. பிரமுகர் உள்பட 4 பேர் கைது


சேலம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் உதயசங்கர் (வயது 30), ரியல் எஸ்டேட் அதிபர். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, தனது நண்பரான அன்னதானப்பட்டியை சேர்ந்த அலெக்ஸ்பாண்டியன் என்பவருடன் சேலம் 3 ரோடு அருகே உள்ள ஒரு கடை முன்பு பேசி கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் உதயசங்கர் மற்றும் அலெக்ஸ் பாண்டியனை வீச்சரிவாளால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த உதயசங்கர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார். அலெக்ஸ்பாண்டியன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொலை தொடர்பாக பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை தொடர்பாக காமலாபுரம் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் (24), 3 ரோடு பகுதியை சேர்ந்த ஆனந்த் (26), சின்னேரி வயக்காடு பகுதியை சேர்ந்த தி. மு. க. பிரமுகர் முருகன் (49) மற்றும் துரைசாமி நகரை சேர்ந்த ராகவன் (23) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கடந்த 14-ந் தேதி உதயசங்கர் சாமிநாதபுரத்தில் உள்ள தனது காலி நிலத்தில் பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து மது குடித்துள்ளார். அப்போது அவர்களிடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் பன்னீர்செல்வத்தை உதயசங்கர் கீழே தள்ளிவிட்டதில் அவருக்கு லேசாக காயம் ஏற்பட்டது. இதுகுறித்து பன்னீர்செல்வம் தனது நண்பர்களான ஆனந்த், சந்தோஷ்குமார் ஆகியோரிடம் தெரிவித்துள்ளார்.இதனிடையே தி. மு. க. பிரமுகர் முருகனை, உதயசங்கர் மிரட்டி அடிக்கடி பணம் பறித்ததாக கூறப்படுகிறது. இதனால் உதயசங்கரை கொலை செய்வதற்கு பன்னீர்செல்வத்துக்கு பணம் கொடுத்து உதவுவதாக முருகன் தெரிவித்துள்ளார். அதன்படி பன்னீர்செல்வம் தரப்பினர் சம்பவத்தன்று 3 ரோடு அருகே உதயசங்கரை வரவழைத்து கொலை செய்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர். மேலும் இந்த கொலை தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via