தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும்
நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மையத்தின் இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில், தர்மபுரி, சேலம், நீலகிரி, கோவை, தேனி, கிருஷ்ணகிரி, நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வட மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
18 ந்தேதி நீலகிரி, கோயமுத்தூர், தேனி, ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
19 ந்தேதி கோவை, தேனி, நீலகிரி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், ஈரோடு, திருப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
20 மற்றும் 21 ந்தேதிகளில் கோயம்புத்தூர், நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள், சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தெற்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடல், தென்மேற்கு அரபிக்கடல், மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு வரும் 21 ந்தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு விவரம் வருமாறு:
மதுராந்தகம், திருத்தணி தலா 9 செ.மீ., சென்னை டிஜிபி அலுவலகம், சோழிங்கநல்லூர், செய்யார், அம்பத்தூர், வில்லிவாக்கம் தலா 8 செ.மீ., பெரம்பூர், பூண்டி, உத்திரமேரூர், சின்னக்கல்லார், மரக்காணம், சத்தியபாமா பல்கலைக்கழகம் தலா 7 செ.மீ., திண்டிவனம், திருக்கழுக்குன்றம், சென்னை நுங்கம்பாக்கம், பூவிருந்தவல்லி, கேளம்பாக்கம் தலா 6 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
Tags :