விதிமுறைகளை மீறி செயல்படும் குவாரிகள் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை.

by Editor / 01-07-2023 09:02:50am
விதிமுறைகளை மீறி செயல்படும் குவாரிகள் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை. தமிழகம் முழுவதும் விதிமுறைகளை மீறி செயல்படும் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;  பட்டா நிலங்களிலும் மூன்று மீட்டருக்கு மேல், மண் எடுக்கக்கூடாது என்பதைப் போல, குவாரிகளுக்கும் நிறைய விதிமுறைகளை கனிம வளத்துறை விதித்துள்ளது. ஆனால் அதீத லாபத்தைக் கருத்தில் கொண்டு எல்லா விதிமுறைகளையும், சூழல் தன்மையையும் குழி தோண்டிப் புதைக்கும் அளவுக்கு குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான லாரிகளில், கேரளாவுக்கு கல், மணல், கிராவல் என அனைத்துக் மணல், கிராவல் என கனிம வளங்களும், கட்டுப்பாடின்றி கடத்தப்படுகின்றன.அனுமதிக்கப்பட்ட அளவை விட ஆழமாகத் தோண்டுவது, வெடி வைப்பது, ஒரு பர்மிட்டை வைத்துக் கொண்டு 10 லோடுகள் அடிப்பது, அனுமதித்த யூனிட்களை விட 3 மடங்கு ஏற்றிச் செல்வது என அத்தனை விதிமீறல்களும் நடக்கின்றன.  கனிமவள கொள்ளையை தடுக்க கோரி கடந்த மே மாதம் தேமுதிக சார்பில் ஆலங்குளத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தி தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், கரூர் மாவட்டத்தில் சட்ட விதிமுறைகளை மீறிய 12 குவாரிகளுக்கு சுமார் 44 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கரூர் மாவட்டம் மட்டுமின்றி கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, கோவை, தேனி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, வேலூர் உள்பட தமிழகம் முழுவதும் செயல்படும் குவாரிகளில் கனிமவளங்கள் சுரண்டப்படுகிறது.  எனவே, அனைத்து குவாரிகளிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்து, முறைகேடு நடைபெறுகிறதா, இல்லையா என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மேலும் விதிமுறைகளை மீறி செயல்படும் குவாரிகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும். அது யாருடைய குவாரியாக இருந்தாலும் பாரபட்சமின்றி தண்டனை கிடைக்க மாவட்ட ஆட்சியர்களும், நீதியரசர்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட விரோதமாக செயல்படும் குவாரிகளின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட வேண்டும். அப்போதுதான் வளமான மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க முடியும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
 

Tags :

Share via