சாலை விபத்தில் கணவன் கண்முன்னே காதல் மனைவி உடல் நசுங்கி பலி.

by Staff / 03-08-2023 02:16:11pm
சாலை விபத்தில் கணவன் கண்முன்னே காதல் மனைவி உடல் நசுங்கி பலி.

சென்னை தரமணி பெரியார் நகர் பகுதியில் வசித்து வருபவர் ரகு (26). ஐடி நிறுவனத்தில் பணியாற்றிய இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஹேமலதா (25) என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். கிண்டியில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் ஹேமலதா பிபிஏ 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை ஹேமலதா சென்னை பெரம்பூரில் தனது தாய் வீட்டிற்குச் செல்வதற்காக, தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அடையாறு மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகே வரும் போது பின்னால் சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பின்னால் அமர்ந்து சென்ற ஹேமலதா கீழே விழுந்தார். அப்போது லாரி சக்கரம் அவர் தலை மீது ஏறி இறங்கியது. இதனால் கணவன் கண் முன்னே சம்பவ இடத்திலேயே ஹேமலதா துடிதுடித்து பலியானார். ரகு லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், ஹேமலதா உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போக்குவரத்து போலீசார், பீகார் மாநிலத்தை சேர்ந்த சிமெண்ட் கலவை லாரி ஓட்டுநர் ஆசாத் (43) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தன் கண்முன்னே பலியான மனைவியின் உடலைக் கட்டிபிடித்து கணவர் கதறி அழுத சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

Tags :

Share via