இளம்பெண் தற்கொலைக்கு காரணம் என்ன போலீசார் விசாரணை
ஜலகண்டாபுரம் ரோடு பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம், கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி முனியம்மாள். இவர்களுடைய மூத்த மகள் தனலட்சுமி(23). இவர் மகுடஞ்சாவடி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வசூல் பணியாளராக பணியாற்றி வந்தார். தனலட்சுமியும், அவருடன் வேலை செய்து வந்த எடப்பாடியை சேர்ந்த மணிமேகலை என்பவரும் நெருங்கிய தோழிகள் ஆவார்கள். வேலை நேரம் தவிர மற்ற நேரங்களில் தனலட்சுமி, மணிமேகலையின் வீட்டிலேயே தான் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி அன்று காலை 10 மணிக்கு தனலட்சுமி துணிப்பையுடன் எடப்பாடியில் உள்ள தனது வீட்டுக்கு வந்தவர் உடனே வெளியே புறப்பட்டு உள்ளார். வீட்டுக்கு வந்த உடன் எங்கே புறப்படுகிறாய் என்று தாயார் கேட்டதற்கு உடல்நலம் சரியில்லை என கூறிவிட்டு வெளியே சென்றவர் அதன்பிறகு வீட்டுக்கு திரும்பவில்லை. தனலட்சுமி செல்போனுக்கு கோமதி தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தன. இந்தநிலையில் நேற்று முன்தினம் தனலட்சுமியின் தங்கைக்கு மணிமேகலையின் கணவர் முருகன் செல்போனில் தொடர்பு கொண்டு உனது அக்காள் தனலட்சுமி விஷம் குடித்து இறந்து விட்டார் என்றும், உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் இருப்பதாகவும் கூறி உள்ளார். தனது மகள் தற்கொலை சம்பவம் குறித்து முனியம்மாள் எடப்பாடி போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags :