மாநகராட்சி ஆணையரிடம் மாமூல் கேட்ட திமுகவினர் மீது நடவடிக்கை
மாநகராட்சி ஆணையரிடம் மாமூல் கேட்ட திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது. பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை அண்ணா நகர் டவர் பூங்காவில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் பங்கேற்க, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் வருகை தந்திருந்தார். அப்போது, அங்கு அமைக்கப்பட்டிருக்கும் அரங்கம் ஒன்றுக்கு ரூ. 3 ஆயிரம் மாமூல் வழங்குமாறு திமுகவினர் கேட்டுள்ளனர். மேலும், இது தொடர்பாக மாநகராட்சி ஆணையரிடம் திமுகவினர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது திமுக நடவடிக்கை எடுக்குமா என்று தெரியவில்லை. ஆனால், ஒரு அரசு அதிகாரியை மிரட்டுவது, மாமூல் கேட்டு பணி செய்யவிடாமல் தடுத்தது ஆகிய குற்றங்களுக்காக உரிய தண்டனை வழங்க வேண்டியது அரசின் கடமை. மேலும், தொடர்ந்து இது போன்ற நடவடிக்கைகளை ஊக்குவித்து வரும் அண்ணா நகர் சட்டபேரவை உறுப்பினர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Tags :