பட்டியலின பெண் சமைத்த உணவை சாப்பிடாமல் புறக்கணித்த மாணவ மாணவிகள்-அமைச்சர் கீதா ஜீவன் நேரில் விசாரணை
முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் பட்டியலின பெண் சமைத்த உணவை பெற்றோர்களின் வற்புறுத்தலால் சாப்பிடாமல் புறக்கணித்த மாணவ மாணவிகள் அமைச்சர் கீதா ஜீவன் நேரில் சென்று மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை
தூத்துக்குடி மாவட்டம்உசிலம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.இங்கு மொத்தம் 11 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதிதொடங்கப்பட்டது.இத்திட்டத்தின் சமையலராக உசிலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த முனிய செல்வி (29) என்பவர் பணியமர்த்தப்பட்டார்.
இவர் கடந்த 25 ஆம் தேதி முதல் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் சமையல் செய்து மாணவ மாணவிகளுக்கு வழங்கி உள்ளார். ஆனால் மாணவ மாணவிகள் பெற்றோர்களின் வற்புறுத்தலால் உணவை சாப்பிடாமல் தவிர்த்து உள்ளனர்.இதனால் மன உளைச்சல் அடைந்த சமையலர் முனிய செல்வி தனது மேலதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜோன் கிறிஷ்டி பாய், எட்டயபுரம் வட்டாட்சியர் மல்லிகா, எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகமது, உதவி தொடக்க கல்வி அலுவலர் முத்தம்மாள் மற்றும் அதிகாரிகள் குழுவினர் பள்ளிக்கு சென்று பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து பள்ளிக்கு வருகை தந்த 11 மாணவர்களுக்கும் உணவுகள் பரிமாறி சாப்பிட அறிவுறுத்தினர். ஆனால் குழந்தைகள் சாப்பிடாமல் அழுது கொண்டே வெகு நேரம் அமர்ந்திருந்தனர்.
அப்போது பெற்றோர்கள் தரப்பில் சமையலரை இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கிராம மக்களின் கோரிக்கை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துவிட்டு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர்.இந்நிலையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதாஜீவன், விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி. மார்க்கண்டேயன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் உசிலம்பட்டி கிராமத்துக்கு நேரில் சென்று அங்கு பயிலும் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்கள் கூறுகையில்,
உசிலம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் இரண்டு மாணவர்கள் மட்டுமே சாப்பிடுவதாகவும்...... மற்ற மாணவர்கள் தவிர்ப்பதாகவும் தகவல் வந்தது. ஆகவே நேரில் ஆய்வு செய்ய வந்தேன். பள்ளி மாணவ மாணவிகளுடன் பேசினேன். அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை.பெர்சனல் மோட்டிவில் சமையலர் பெண்ணுடன் சண்டை போட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த பிரச்சனைக்கு நாளையே முற்றுப்புள்ளி வைக்கப்படும். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Tags :