பிரதமர் ஆவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு முழு தகுதியும் உள்ளது - செல்லூர் ராஜு பேச்சு.

by Editor / 28-10-2023 10:23:05am
 பிரதமர் ஆவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு முழு தகுதியும் உள்ளது - செல்லூர் ராஜு பேச்சு.

அதிமுக 52 வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மகபூப்பாளையத்தில் அதிமுக சாதனை விளக்க  பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்துகொண்டு பேசியதாவது;

அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் என்று அறிவித்துவிட்டு தற்போது அல்வா கொடுத்துள்ளனர் திமுகவினர். ஆனால் அதிமுக அரசு , அனைவருக்கும் மிக்சி, கிரைண்டர் அதேபோன்று அனைத்து குடும்ப அட்டைதாரருக்கும் விலை இல்லா அரிசி என பாரபட்சமின்றி அனைவருக்கும் வழங்கினோம். 

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மதுக்கடைகள் மூடப்படும் என்றும், ஒரு சொட்டு மது கூட தமிழகத்தில் கிடைக்காது என தெரிவித்திருந்தனர், ஆனால் தற்போது பாட்டிலுக்கு பத்து ரூபாய் கமிஷன் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

நம்ம செந்தில் பாலாஜி அதனை தொடங்கி வைத்தார், தற்போது முத்துசாமி தொடர்ந்து வருகிறார். அந்த பணம் எல்லாம் எங்கே போகிறது என தெரியவில்லை..? மேலும் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தால் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். கம்யூனிசம் கொள்கையை அடமான வைத்து விட்டனர் திமுகவினரிடம்.

நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து சூட்சமம் இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார். தற்போது கையெழுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார். தமிழகத்தில் மட்டும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரிந்தது, அதனாலேயே 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு பெற்று இதன் மூலம் ஏழை எளிய மாணவ,மாணவியர்கள் இலவசமாக மருத்துவம் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளார்.

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் கணக்கு கேட்ட பெரிய கணக்கு புலி யோட ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இன்றைக்கு அமைச்சரவையில்  கடைசி துறையான தொழில்நுட்ப துறை  அமைச்சராக பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் பல்லை பிடுங்கி உட்கார வைத்துள்ளனர்.

கோரிப்பாளையம் பாலம் அமைக்க திட்டம் தீட்டியது அதிமுக தான் தற்போது இவர்கள் புதிதாக பூஜை போடுகின்றனர். நம்ம பிள்ளை பெற்றால் இவர்கள் பெயர் வைக்கின்றனர். தற்போது அதிமுகவின் திட்டங்களையே கபலிகரம் செய்கின்றனர்.

அதிமுக ஆட்சி தொடர்ந்தால் மதுரை மெல்பன் நகரம் போன்றும், வைகை நதியை தேம்ஸ் நதி போன்றும் மாற்றுவோம் என்று தெரிவித்தது நடந்திருக்கும்.

எங்கள் மீது துரும்பு வீசினால் நாங்கள் பதிலுக்கு தூணை  வீசுவோம். அதிமுக தேன் கூடு போன்றது கொட்டினால் தாங்க மாட்டிங்க.

மத்தியில் ஆளும் அரசின் கட்சியில் தமிழத்தில் பாஸ்ட் புட்  தலைவர்கள் உருவாகி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள ரவுடிகள் அனைவரும் இன்றைக்கு பாஜகவில் தான் உள்ளனர். மெத்த படிச்சவனுக்கு பத்தும் போயி  பித்து பிடித்தது போன்று கீழ்பாக்கத்தில் இருக்க வேண்டியவன் தற்போது ஊர் ஊராக நடந்து செல்கின்றான்.

இந்திய ஜனநாயக நாட்டில் யார் வேண்டும் என்றாலும் பிரதமர் ஆகலாம் எந்த அளவுகோலும் இல்லை.  குறிப்பாக கொரோனா தொற்று பரவல் காலத்தில் டாஸ்மாக், வனிகவரி உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் வருவாய் இல்லாமல் கஜானா காலியான போதும் பொருளாதாரம் நிலைகுலையாமல் மக்கள் நலனுக்கு கொரோனா தாக்கம் இல்லாத அளவிற்கு சிறப்பாக செயல்பட்ட எடப்பாடி பழனிசாமி ஏன் பிரதமராக ஆக கூடாது. 

அன்றைக்கு மத்திய அரசே அனைத்து மாநிலங்களுக்கும் தமிழகம் முன்மாதிரியாக இருக்கிறது என்று தெரிவித்து. எனவே எடப்பாடியார் பிரதமர் ஆக முழு தகுதியும் கொண்டவர் என்று பேசினார்.


 

 

Tags :  பிரதமர் ஆவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு முழு தகுதியும் உள்ளது - செல்லூர் ராஜு பேச்சு

Share via