மறைந்த தேமுதிக நிறுவனத் தலைவர்  விஜயகாந்துக்கு  சிலை மற்றும் மணிமண்டபம் அமைக்க  பிரேமலதா கோரிக்கை.

by Editor / 30-12-2023 08:53:28pm
மறைந்த தேமுதிக நிறுவனத் தலைவர்  விஜயகாந்துக்கு  சிலை மற்றும் மணிமண்டபம் அமைக்க  பிரேமலதா கோரிக்கை.

கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் இன்று மரியாதை செலுத்திய பிரேமலதா கூறியதாவது,

“விஜயகாந்தின் நினைவிடத்தில் தினம்தோறும் பூஜைகள், அலங்காரங்கள் செய்யப்படும். பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் வந்து அஞ்சலி செலுத்தலாம். இறுதி ஊர்வலத்தில் மிகப் பெரிய ஒத்துழைப்பு கொடுத்த தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், ஆளுநர் ரவிக்கும், ஆளுநர் தமிழிசைக்கும், அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும், திரையுலகை சேர்ந்தவர்களுக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். இதேபோல் நேரிலும், தொலைபேசி வழியாகவும் இரங்கல் தெரிவித்த அனைவருக்கும் தலைவணங்கி நன்றித் தெரிவித்து கொள்கிறேன்.

விஜயகாந்துக்கு பொது இடத்தில் சிலை மற்றும் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். தமிழக அரசு நிச்சயம் செய்துகொடுக்கும் என்று நம்புகிறோம்” என்று கூறினார். முன்னதாக, அனைவருக்கும் பிரேமலதா கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

கோயம்பேடு தேமுதிக கட்சி அலுவலகத்தில் நேற்று (டிச. 29) இரவு விஜயகாந்தின் இறுதிச் சடங்கு முடிந்த பின்னர் பிரேமலதா கூறும்போது, “தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு தலைமை அலுவலகம் வரை 14 கிமீ தூரம் நடந்த இறுதி ஊர்வலத்தில், வழிநெடுக விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்திய அத்தனை தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், பொதுமக்களுக்கும் என் நன்றி.

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை எந்தவொரு தலைவருக்கும் கிடைக்காத ஒரு மிகப்பெரிய பெருமை விஜயகாந்துக்கு கிடைத்திருக்கிறது. புள்ளிவிவரங்களின் படி கடந்த 2 நாட்களில் விஜயகாந்தின் இறுதிச்சடங்கில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இதற்கு விஜயகாந்த் செய்த தர்மமும், அவருடைய நல்ல எண்ணமும், குணமும்தான் காரணம்.” என்று தெரிவித்தார்.

 

Tags : மறைந்த தேமுதிக நிறுவனத் தலைவர்  விஜயகாந்துக்கு  சிலை மற்றும் மணிமண்டபம்

Share via