புதுப்பெண் தற்கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை

by Staff / 17-04-2024 11:25:29am
புதுப்பெண் தற்கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை

சிவகாசி அருகே விஸ்வநத்தத்தைச் சேர்ந்தவர் ரெங்கராஜ் (27). இவருக்கும் சிவகாசியைச் சேர்ந்த ராஜலட்சுமி (21) என்பவருக்கும் கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரியில் திருமணம் நடைபெற்றது. ரெங்கராஜ் அச்சகத்தில் கூலி வேலை செய்து வந்தார். வரதட்சணை கொடுமை காரணமாக 2020ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி ராஜலட்சுமி ரத்த அழுத்த மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜலட்சுமி செப்டம்பர் 26ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிவகாசி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெங்கராஜ், அவரது தாய் பாண்டியம்மாள், சகோதரர் சுப்புராஜ் ஆகியோரை கைது செய்தனர். வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் ரங்கராஜூக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.13 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பகவதியம்மாள் தீர்ப்பளித்தார். சுப்புராஜ், பாண்டியம்மாள் இருவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

 

Tags :

Share via