காபூல் விமான நிலையத்தில்  துப்பாக்கிச் சூடு: 5 பேர் பலி

by Editor / 16-08-2021 04:31:45pm
காபூல் விமான நிலையத்தில்  துப்பாக்கிச் சூடு: 5 பேர் பலி



ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலிபான்கள் கைபற்றிய நிலையில் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல விமான நிலையத்தில் மக்கள் அலைபோல் திரண்டனர். இதனால் பதட்டம், பரபரப்பு ஏற்பட்டது. நிலைமையை சமாளிக்க முடியாமல் இருந்த நிலையில் அங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியானார்கள். காபூல் விமான நிலையம் மூடப்பட்டது.


இதற்கிடையில் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியர்களை மீட்பதில் சிக்கல் எழுந்துளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிபர் அஷ்ரப் கானி நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் பதற்றம் நிலவுகிறது.


தலிபான்கள் மீண்டும் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்க இருப்பதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டைவிட்டு பிற நாடுகளை நோக்கி படை எடுத்து வருகின்றனர். இதன் காரணமாக காபூலில் மக்கள் திரண்டுள்ளனர். அந்நாட்டு மக்கள் மற்றும் பிற நாட்டு மக்கள் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். மக்கள் கூட்டம் அலைமோதியதையடுத்து கூட்டத்தை தவிர்க்கும் வகையில், காபூல் விமான நிலையம் மூடப்பட்டது. இயக்கப்படும் அனைத்து விமான சேவையையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். இதில் பொதுமக்கள் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.


 அமெரிக்காவில் சிக்கித் தவிக்கும் அமெரிக்கர்களை பத்திரமாக மீட்டு நாட்டுக்கு அழைத்து வர 6000 துருப்புக்களை பயன்படுத்துவோம் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது

 

Tags :

Share via