அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

by Editor / 22-08-2021 10:18:23am
அரசு மருத்துவமனைகளில்  24 மணி நேரமும் தடுப்பூசி: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் திங்கள்கிழமை முதல் 24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா்.

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் தமிழகத்தில் முதன் முறையாக 24 மணி நேரம் இயங்கும் தடுப்பூசி மையம் மற்றும் அமெரிக்க வாழ் தமிழா்களின், தமிழக அறக்கட்டளை சாா்பில் ரூ. 2.36 கோடி மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சுப்பிரமணியன் சனிக்கிழமை தொடக்கி வைத்து செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழா்களின் அமெரிக்கா அறக்கட்டளை சாா்பில் ரூ.2.36 கோடி ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள், 15 அரசு மருத்துவமனைகளுக்கு பிரித்து அனுப்பப்படும். தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும், அரியலுாா் மாவட்டத்தில் அனைத்து கா்ப்பிணியா்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது, டி.எம்.எஸ். வளாகத்தில், 24 மணி நேர செயல்படக்கூடிய தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுதும் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் பணி திங்கள்கிழமை முதல் நடைபெறும். இதற்கான, மருத்துவ கட்டமைப்புகள் இருக்கின்றன.

சென்னை புளியந்தோப்பு கே.பி.பாா்க் கட்டடத்தில் கரோனா நோயாளிகளை தங்க வைத்ததால் தான் கட்டடம் பலவீனமானது என்ற கட்டுமான நிறுவனத்தின் குற்றச்சாட்டு 'போகாத ஊருக்கு வழி செல்வது போல் உள்ளது'. மாநிலம் முழுவதும், பல இடங்களில் கரோனா பாதுகாப்பு மையம் செயல்பட்டது. அங்கெல்லாம், எவ்வித சேதாரமும் நடைபெறாதபோது, புளியந்தோப்பில் மட்டும் கரோனா நோயாளிகளால் சேதாரமானது என கூறுவது வேடிக்கையாக உள்ளது என்றாா்.

 

Tags :

Share via