காபுல் விமான நிலையத்தில் ஒரு பாட்டில் தண்ணீர் ரூ.3000, சாப்பாடு ரூ.7,500

by Editor / 29-08-2021 06:11:09pm
காபுல் விமான நிலையத்தில் ஒரு பாட்டில் தண்ணீர் ரூ.3000, சாப்பாடு ரூ.7,500

காபுல் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் மீட்கப்படுவதற்காக காத்திருக்கும் நிலையில் அங்கு ஒரு பாட்டில் குடிதண்ணீரின் விலை இந்திய மதிப்பில் ரூ.3,000க்கும், சாப்பாடு ரூ.7,500 க்கும் விற்கப்படுவதாக அங்கு சிக்கித்தவிக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். தாலிபான்கள் ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றும் வரையில் உலக நாடுகளின் ஒட்டுமொத்த கவனமும் ஆப்கானிஸ்தான் மீதே இருந்தது, தற்போது தாலிபான்கள் கட்டுப்பாட்டில் ஆப்கன் வந்த பின்னர் உலக நாடுகளின் ஒட்டுமொத்த கவனனும் காபுல் மீது குறிப்பாக அங்குள்ள ஹமீது கர்சாய் விமான நிலையத்தின் மீதே உள்ளது.

கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி காபுல் நகரை தாலிபான்கள் கையகப்படுத்திய பின்னர் ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாடும் அவர்களின் கைகளுக்கு மாறியிருக்கிறது. ஆனால் காபுலில் சிக்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் முழுமையாக மீட்கப்படும் வரை காபுல் விமான நிலையத்தின் கட்டுப்பாட்டை மட்டும் அமெரிக்கா கையில் வைத்திருக்கிறது.

தற்போது காபுலின் ஹமீது கர்சாய் விமான நிலையம் மட்டுமே ஆப்கனை விட்டு வெளியேறுவதற்கான ஒரே வழியாக உள்ளது. இதன் காரணமாக காபுல் விமான நிலையத்தின் எதிரே பல்லாயிரக்கணக்கான ஆப்கன் மக்கள் ஏதேனும் ஒரு விமானத்தில் ஏறி வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல வேண்டும் என்ற வேட்கையில் அங்கேயே தங்கியுள்ளனர்.
காபுல் விமான நிலையம் மட்டுமே அமெரிக்கர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. விமான நிலையத்துக்கு செல்லும் பகுதிகள் மற்றும் வெளிப்புற பகுதிகள் என அனைத்துமே தாலிபான்கள் வசம் தான் உள்ளது. இதற்கிடையே காபுல் விமான நிலையம் அருகே குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது, இதில் அமெரிக்கர்கள், இங்கிலாந்துக்காரர்கள் என சுமார் 170 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

காபுல் விமான நிலையத்தில் ஒரு பாட்டில் குடிதண்ணீரின் விலை இந்திய மதிப்பில் ரூ.3,000க்கும், சாப்பாடு ரூ.7,500 க்கும் விற்கப்படுவதாக அங்கு சிக்கித் தவிக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். அங்கு விற்பனை செய்யப்படும் பொருட்கள் எதுவும் ஆப்கன் மதிப்பில் விற்கப்படுவதில்லை, அமெரிக்க டாலர்கள் மதிப்பில் விற்கப்படுகிறது. இது சாமாணிய மக்களுக்கு கட்டுப்படியாகாது எனவும் அவர் தெரிவித்துள்ளதாக ராய்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டிருக்கிறது.
காபுல் விமான நிலையம் அருகே நிலவும் மோசமான சூழலை அடுத்து அவ்வப்போது அங்குள்ள மக்களுக்கு அமெரிக்க படையைச் சேர்ந்தவர்கள் தண்ணீர் பாட்டில்களை இலவசமாக வழங்கி வருகின்றனர்,
அதே போல காபுல் விமான நிலையத்தில் சிக்கித்தவிக்கும் பெண்கள், சிறுமிகளின் நிலை மிகவும் கேள்விக்குறியாக இருப்பதாக அங்கிருப்பவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இவர்கள் விரைவாகவே மீட்கப்படவேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via