9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் -  7 முனை போட்டி

by Editor / 21-09-2021 05:38:18pm
 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் -  7 முனை போட்டி

 

புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் இந்த 9 மாவட்டங்களுக்கும் அடுத்த மாதம் (அக்டோபர்) 6, 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ந்தேதி தொடங்கி நாளையுடன் முடிவடைகிறது. 23-ந்தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. 25-ந்தேதி வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும்.ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி ஒரு அணியாகவும், அ.தி.மு.க. கூட்டணி இன்னொரு அணியாகவும் களம் காண்கின்றன.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய தேசிய லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, த.மா.கா. ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த பா.ம.க. அந்த கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிடுகிறது.
விஜயகாந்தின் தே.மு.தி.க., கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி, டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளும் தனித்தே களம் காண்கின்றன.
இதன் மூலம் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 7 முனை போட்டி ஏற்பட்டு உள்ளது. தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் போட்டியிடுகின்றன.
அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜனதாவும் தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்களை கேட்டு பெற்று களம் இறங்குகிறது. த.மா.கா.வுக்கு குறிப்பிட்ட சில இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
இந்த இரண்டு கூட்டணிகளுக்கு போட்டியாக பா.ம.க., தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களும் களத்தில் இறங்கியுள்ளனர். பதவிகளை பிடிக்க அனைத்து கட்சி வேட்பாளர்கள் மத்தியிலும் கடும் போட்டி நிலவுகிறது..உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 12-ந்தேதி எண்ணப்படுகிறது. அன்றே முடிவுகளும் வெளியாக உள்ளன.

 

Tags :

Share via