குற்றவாளிகள் நடமாடினால் கண்டறியும்  சாஃப்ட்வேர்: தொடங்கிவைத்த முதலமைச்சர்

by Editor / 04-10-2021 03:35:03pm
குற்றவாளிகள் நடமாடினால் கண்டறியும்  சாஃப்ட்வேர்: தொடங்கிவைத்த முதலமைச்சர்

 

காவல்துறையின் பயன்பாட்டிற்காக முக அடையாளம் கண்டறியும் மென்பொருளை தமிழ்நாடு முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தலைமைச் செயலகத்தில், காவல்துறையின் பயன்பாட்டிற்காக
முக அடையாளம் கண்டறியும் மென்பொருளைதொடங்கி வைத்தார்.


இந்த முக அடையாளம் கண்டறியும் மென்பொருளானது), ஒரு தனிநபரின்புகைப்படத்தினை காவல் நிலையங்களில்  பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள நபர்களின் புகைப்பட தரவுகளோடு ஒப்பிட்டு அடையாளம் கண்டறிய பயன்படுகிறது. இதுவரை, 5.30 இலட்சம் புகைப்படங்கள்பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.


மென்பொருளை காவல் நிலையத்தில், இணையதள வசதியுள்ள கணினியிலும், களப்பணியின்போது செயலியை கைப்பேசியிலும் காவல் அலுவலர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இச்செயலியின் மூலம் குற்றவாளிகள், சந்தேக நபர்கள், காணாமல் போனவர்கள் மற்றும் அடையாளம் தெரியாத உடல்கள் ஆகிய புகைப்படங்களை தரவுகளில் உள்ள புகைப்படங்களுடன் ஒப்பிட்டு அடையாளம் கண்டறியலாம். இச்செயலியின் மூலம் ஒப்பீடு செய்யப்பட்ட புகைப்படத்தில் உள்ள நபர், வேறொரு காவல் நிலைய வழக்கில் தொடர்புடையவராக இருந்தால், காவல் அலுவலர்கள் இச்செயலியின் மூலமே சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அந்நபரை பற்றிய தகவல் அனுப்பும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


இச்செயலியைப் பயன்படுத்தி, காவல் அலுவலர்கள் ரோந்துப் பணி, வாகனத் தணிக்கை மற்றும் இதர காவல் பணிகளை மேற்கொள்ளும்போது, குற்றவாளிகள் / சந்தேகத்திற்குரிய நபர்களின் புகைப்படம் மூலமாக அவர்களின் முழு குற்றப் பின்னணியினையும் எளிதாக தெரிந்து கொள்ளலாம். மேலும், சந்தேக நபர்களை பிடித்து விசாரிக்கும்போது, அவர்களின் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளதா என்பதனை கண்டறிந்து கைது நடவடிக்கையை மேற்கொள்ளலாம். அத்துடன் காணாமல் போன நபர்களையும் இச்செயலி மூலம் கண்டறிந்து உரியவர்களிடம் ஒப்படைக்க வழிவகை ஏற்படும். இந்தசெயலியானது, குற்றங்களை கண்டுபிடிக்கவும், குற்றத் தடுப்புப் பணிகளை செவ்வனே மேற்கொள்ளவும் காவல்துறையினருக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.


இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ.சைலேந்திர பாபு, இ.கா.ப., காவல்துறை கூடுதல் இயக்குநர் (மாநில குற்ற ஆவணக் காப்பகம்) வினித் தேவ் வான்கேடே, இ.கா.ப., மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

 

Tags :

Share via