ரயில் மோதி பலியான யானைகள் உடல் பிரேத பரிசோதனை

by Editor / 27-11-2021 03:32:39pm
ரயில் மோதி பலியான யானைகள் உடல் பிரேத பரிசோதனை


தமிழக -கேரள எல்லையான நவக்கரை அருகே ரயில் பாதை உள்ளது.இந்த பாதை அடர்ந்த வனப்பகுதி ஆகும்,இந்த பாதையில்தான்  கேரளாவிலிருந்து  தமிழகத்திற்கு ரயில்கள் சென்று வரும் முக்கிய பாதையாகும்,இந்நிலையில் நேற்றிரவு 9.15மணியளவில் மங்களூர் - சென்னை இடையேயான விரைவு ரயில் ஓன்று இந்த தடத்தில்  வந்து கொண்டிருந்தது.

வாளையாறு பகுதியை கடந்து மதுக்கரைக்கு இடையே நவக்கரை கிராமத்தின் மரப்பாலம் தோட்டம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் ரயில் வந்துகொண்டிருந்த போது, ரயில் தண்டவாளத்தில்  3 யானை நெருங்கிவந்து  கடப்பதை கண்டு ரயில் ஓட்டுனர் அதிர்ச்சி அடைந்து ரயிலை நிறுத்துவதற்கு முயற்சித்த நிலையில் ரயில்  அதிவேகத்தில் யானைகள் மீது மோதியது. இதில் 3 யானைகள் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தநிலையில் 3 யானைகளையும் சிறிது தூரம் இழுத்து  சென்ற நிலையில் ஒரு யானை தண்டவாளத்திழும்,இரண்டு யானைகள்  பின்னரே ரயில் நின்றுள்ளது.இதில் ஒரு யானை தண்டவாளத்திலேயே விழுந்துவிட, 2 யானைகள் அருகிலிருந்த பள்ளத்தில் தூக்கிவீசப்பட்டன. இந்த விபத்தில் 3 யானைகளும்  பரிதாபமாக பலியாயின.இதில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க மக்னா யானையுடன் வந்த இரண்டு பெண் யானைகள் என்பது தெரியவந்தது.

இது குறித்து ரயில் ஓட்டுனர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே ஊழியர்கள் மற்றும் வனத்துறையினர் யானையின் உடல்களை தண்டவாளத்திலிருந்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து அப்பாதையில் சிறிது நேரம் தற்காலிகமாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.பின்னர் இந்த ரயிலும் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு புறப்பட்டு  சென்றது. யானையில் அலறல் சப்தம் கேட்டு அருகிலுள்ள கிராம மக்கள் தகவலறிந்து அங்கு திரண்டு வந்து யானைகளின் உடல்களுக்கு கற்பூரம் ஏற்றி ஆன்மா சாந்தியடைய அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து யானைகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய வனத்துறையினர் முடிவு செய்தனர்.மூன்று யானைகளையும் ஒரே இடத்தில் வைத்து பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்ய வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.யானைகளுக்கு பிரதேச பரிசோதனை செய்யும் பணி துவங்கியது. வனத்துறை மருத்துவர்கள் சுகுமார், ராஜேஷ் ஆகியோர் பிரேத பரிசோதனை செய்து வருகின்றனர்.

இதனிடையே ரயிலை இயக்கிய ஓட்டுநர் சுபயர், அவரது உதவியாளர் முகில் ஆகியோரை வாளையார் பகுதியில் வைத்து ரயில்வே போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
வனவிலங்குகள் நடமாடும் பகுதிகளில் குறிப்பிட்ட வேகத்தில் மட்டுமே ரயிலை இயக்க வேண்டும் என்ற ரயில்வே நிர்வாகம் விடுத்துள்ள கட்டுப்பாட்டை மீறி வேகமாக இயக்கப்பட்டிருந்தால் வன உயிர்கள் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் ரயில் ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மண்டல வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

தமிழக கேரள எல்லையின் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த பாதையை தினந்தோறும் ஏராளமான வனவிலங்குகள் கடந்து சென்று வருகின்றன. குறிப்பாக யானைகள் இந்தப்பகுதியை அதிகளவில் கடப்பதால் ரயில்களுக்கு வேகக்கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.அதையும் மீறி கட்டுபாடற்ற வேகத்தில் செல்லும் ரயில்கள் மோதி யானைகள்  இறந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via