மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் கன்னியாகுமரி சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு.

by Editor / 07-12-2021 02:05:45pm
மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும்  கன்னியாகுமரி     சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு.

 

உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் கன்னியாகுமரியும் ஒன்று. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் சுற்றுலா பயணிகளின் வருகை வழக்கத்தைவிட அதிகமாக காணப்படும்.
 
இந்த 3 மாத காலமும் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் வருகையும் அதிகமாக இருக்கும். இதனால் இந்த 3 மாத காலமும் இங்கு சீசன் காலமாக கருதப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அடியோடு நின்று போய் விட்டது.

தற்போது கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதைத் தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு விமான போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகளும் இந்தியாவுக்கு வரத் தொடங்கி உள்ளனர். அந்த அடிப்படையில் இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வர தொடங்கி உள்ளனர்.

2 வருடங்களுக்கு பிறகு கன்னியாகுமரிக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்ததால் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களையும் கடற்கரைப் பகுதிகளையும் மிகுந்த உற்சாகத்துடன் கண்டுகளித்தனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியதால் கன்னியாகுமரி மீண்டும் பழைய இயல்பு நிலைக்கு படிப்படியாக திரும்பிய வண்ணம் உள்ளது.

 

Tags :

Share via