அதிமுக தலைமை அலுவலகத்தில் திடீர் மோதல்..

by Editor / 18-06-2022 02:00:43pm
அதிமுக தலைமை அலுவலகத்தில் திடீர் மோதல்..

அதிமுகவில் தலைமை அலுவலகத்தில் கூடியிருந்த தொண்டர்களிடையே திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி ஆளா எனக்கேட்டு தன்னை ஒருவர் தாக்கியதாக ரத்த காயத்துடன் நிர்வாகி ஒருவர் செய்தியாளர்களிடம் புகார் கூறினார்.

அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் வரும் 23ஆம் தேதி கூட உள்ள நிலையில் ஒற்றைத்தலைமை விவகாரம் சூடு பிடித்துள்ளது.

இரட்டை தலைமைதான் சரியாக இருக்கும் என்று கூறி வருகிறார் ஓ.பன்னீர் செல்வம்.

ஒற்றைத்தலைமை வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் தனித்தனியே ஆலோசனை நடத்தியதால் விவகாரம் சூடுபிடித்தது.

இந்த நிலையில் அதிமுக அலுவலகத்திற்கு வந்துள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.

ஐந்தாவது நாளாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய ஓ.பன்னீர் செல்வம் இன்று ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அவரது ஆதரவாளர்கள் அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதிமுக அலுவலகத்தில் தொண்டர்கள் குவிந்துள்ளனர். ஜெயக்குமார் வந்த போது அவருக்கு ஆதரவாகவும் எதிர்பாகவும் முழக்கமிட்டனர்.

இந்த நிலையில் ஜெயக்குமாரின் ஆதரவாளர்கள் சிலர் அண்ணன் டிஜெ வாழ்க என்று முழக்கமிட்டு அவரை உள்ளே அழைத்துச்சென்றனர். வெளியே இருந்த தொண்டர்கள் அண்ணன் ஓபிஎஸ் வாழ்க என்று முழக்கமிட்டனர்.

அதிமுக அலுவலகத்தில் தீர்மானக்குழுவினருடன் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை மெற்கொண்டார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஜெயக்குமார், வைத்திலிங்கம், பொன்னையன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிலையில் தொண்டர்களிடையே திடீரென கைகலப்பு ஏற்பட்டது.

அப்போது ரத்தக்காயங்களுடன் ஒருவர் வந்து எடப்பாடி ஆளா நீ என்று கேட்டு சிலர் தாக்கியதாக கூறினார். தாக்கப்பட்ட அந்த நபரின் பெயர் பெரம்பூர் மாரிமுத்து என்று தெரியவந்தது. அவர் ஜெயக்குமாரின் ஆதரவாளராம். சிலர் ரத்த காயங்களுடன் வெளியேறினர். அப்போது ஊடகங்களைச் சேர்ந்தவர்களும் வெளியேற்றப்பட்டனர்.தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதலால் அதிமுக அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

 

Tags :

Share via