பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்த நாள் விழா – தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை

by Staff / 15-09-2022 11:23:57am
பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்த நாள் விழா – தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 114-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மதுரை கீழவெளி வீதி-மேலவெளி வீதி சந்திப்பு நெல்பேட்டை பகுதியில் உள்ள அண்ணாவின் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்ற நிலையில், அங்குவைத்தே அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

இதேபோல், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மைச்செயலாளர் கே.என்.நேரு உள்ளிட்ட கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் இந்த நிகழ்ச்சியில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் அனைத்து அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் அரசு உயரதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனிடையே, கனிமொழி எம்.பி. தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழர் நலன் காக்க, இன மானம் காக்க இங்கு உதித்த புரட்சி சூரியன் பேரறிஞர் அண்ணா என்றும் ஒன்றியத்தில் தேங்கும் அதிகாரங்களை உடைத்து மக்களுக்கான அரசை உருவாக்கும் தத்துவத்தைக் கற்பித்த மேதையின் பிறந்தநாள் இன்று என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர் கைகாட்டிய திசையில் நம் உரிமைக்கானப் போராட்டத்தைத் தொடர்வோம் என அவர் பதிவிட்டுள்ளார்.

பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்த நாள் விழா – தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை
 

Tags :

Share via