கல்லூரி மாணவி ரயிலில் தள்ளி கொன்ற இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

by Editor / 05-11-2022 06:13:55pm
  கல்லூரி மாணவி  ரயிலில் தள்ளி கொன்ற  இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்திய பிரியா, ரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய சதீசை போலீசார் கைது செய்தனர். விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற்ற பின், சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தப்பட்ட சதீசை 28-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதையடுத்து டி.எஸ்.பி. செல்வகுமார் தலைமையில் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்டுள்ள சதீசுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுக் கொடுக்க முடிவு செய்தனர்.

இதற்காக சிறையில் உள்ள சதீசை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காணொலி மூலமாக சதீஷ் ஆஜர்படுத்தப்பட்டார். காவல்துறையின் மனுவை விசாரித்த நீதிமன்றம், சதீஷை ஒருநாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது.

இதையடுத்து சதீஷை சிறையில் இருந்து சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், கைதான சதீஷ் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் பரிந்துரையில் சென்னை மாநகர காவல் ஆணையர்  நடவடிக்கை எடுத்துள்ளார்.

 

Tags :

Share via