4 மாவட்டங்களில் இருந்து 1300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுகின்றனர்.

by Editor / 30-07-2023 10:50:03pm
4 மாவட்டங்களில் இருந்து 1300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுகின்றனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடித்தபசு திருவிழா விமரிசையாக ெகாண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் சுவாமி-அம்பாள் வீதி உலா நடந்து வருகிறது. மேலும் கோவில் உள்பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் பக்தி சொற்பொழிவு, பக்தி இன்னிசை கச்சேரி, பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு மேல் அம்பாள் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து காலை 10.35 மணிக்கு திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழா நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. ஆடித்தபசு திருவிழாவில் தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாம்சன் தலைமையில் 5.ஏ.டி.எஸ்.பி.க்கள், 7 டி.எஸ்.பி.க்கள், 25 ஆய்வாளர்கள், 60 உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட  நான்கு மாவட்டங்களில் இருந்து 1300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுகின்றனர்.  தென்காசி மாவட்ட காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.மேலும் நாளை மதியம் 12 மணிக்கு தங்க சப்பரத்தில் கோமதி அம்பாள் ஆடித்தபசு மண்டபத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை 5 மணிக்கு சங்கரநாராயண சுவாமி தபசு காட்சிக்கு புறப்பாடும், மாலை 6.30 மணிக்கு சங்கரநாராயண சுவாமி ரிஷப வாகனத்தில் கோமதி அம்பாளுக்கு தபசு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 

தொடர்ந்து இரவு 10.30 மணிக்கு சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் புறப்பாடும், நள்ளிரவு 12.05 மணிக்கு சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் கோமதி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.


 

4 மாவட்டங்களில் இருந்து 1300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுகின்றனர்.
 

Tags :

Share via