முன்னாள் முதல்வர் நாராயணசாமி அனைத்திலும் அரசியல் செய்கிறார் -தமிழிசை சவுந்தரராஜன்

by Editor / 03-12-2022 08:25:54am
முன்னாள் முதல்வர் நாராயணசாமி  அனைத்திலும் அரசியல்   செய்கிறார் -தமிழிசை சவுந்தரராஜன்

சென்னை அடுத்த ஆவடி தனியார்ப் பள்ளியில் தமிழ்நாடு, புதுச்சேரி,தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களை உள்ளடக்கிய தென் மண்டல அளவிலான சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு இடையேயான செஸ் போட்டி நடந்தன.இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளிக்கும் விழா பள்ளி வளாகத்தில்  நடைபெற்றது. இதில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்குப் பரிசுகளை வழங்கினார்.

பின்னர் பேசிய ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், செஸ் விளையாட்டு போன்றுதான் வாழ்க்கையும் முன்னேறச் சற்று பின்னோக்கி செல்ல வேண்டியது அவசியம். சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஆனால் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் தடுப்பூசி எடுத்துக்கொண்டதால் தான். விமானத்தில் சென்றால் பாதுகாப்பு இல்லை என தோன்றும், காரில் சென்றால் பாதுகாப்பு இல்லை என தோன்றும் ஆனால் இப்பொழுது லிப்டில் செல்வது கூட பாதுகாப்பு இல்லை என கூறியவர் என்ன வாழ்க்கை இது என எண்ணத் தோன்றுவதாக கூறினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரி கோவில் யானை லட்சுமி இறந்த விவகாரத்தில் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டுக்கு, அனைத்திலும் அரசியல் செய்து வந்தவர் தற்போது யானையிலும் அரசியல் செய்கிறார் என்பதுதான் கவலையாக உள்ளது. உங்களை, என்னை குறை கூறிவிட்டு தற்போது யானைக்கு வந்துவிட்டார். யானை இறந்தது அனைவருக்கும் மன வருத்தம்தான் என பேசினார்.

மேலும், இனி வரும் காலத்தில் கோவில் யானைகளை எப்படி பாதுகாக்க வேண்டும் என வழிமுறைகளை மேற்கொள்ளலாம் என தெரியவந்துள்ளது. யானை லட்சுமிக்கு ஏற்கனவே உடல்நிலை சரி இல்லாமல் இருந்தது. இறந்தவுடன் உடற்கூறாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்திலும் விமர்சனம் செய்வது மக்களை வேறு விதமாகச் சிந்திக்க வைக்கும் என கருத்து கூறினார்.

 

Tags :

Share via