பாழடைந்த கிணற்றில் பிணமாக கிடந்த பேராசிரியர்

by Staff / 02-02-2023 02:37:19pm
பாழடைந்த கிணற்றில் பிணமாக கிடந்த பேராசிரியர்

நாகர்கோவில் வட்டவிளை அருகே உள்ள கண்ணன்குளம் பகுதியில் ஒரு பாழடைந்த கிணறு உள்ளது. இந்த கிணறு மக்கள் பயன்பாடு இன்றி காணப்படுகிறது. இந்த கிணற்றின் அருகே நேற்று ஒரு மோட்டார் சைக்கிள் வெகு நேரமாக நின்று கொண்டிருந்தது. இதை பார்த்து அந்த வழியாக சென்ற சில வாலிபா்கள் அந்த கிணற்றின் அருகே சென்று நோட்டமிட்டனர். அப்போது கிணற்றின் சுற்றுச்சுவரில் ஒரு வெள்ளை காகிதம் இருந்தது. அதில் பேனாவால் பெரிய எழுத்துக்களில் 'கிணற்றில் உள்ளே பார்க்கவும்' என எழுதப்பட்டு இருந்தது.
இதனைதொடர்ந்து அந்த வாலிபர்கள் கிணற்றினுள் எட்டி பார்த்தனர். அப்போது, கிணற்றினுள் தண்ணீரில் ஒரு ஆண்பிணம் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இதுபற்றி நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கும், கோட்டார் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கயிறு கட்டி கிணற்றினுள் இறங்கி, பிணத்தை கைப்பற்றி மேலே கொண்டு வந்தனர். இதற்கிடையே கோட்டார் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.முதற்கட்ட விசாரணையில், கிணற்றில் பிணமாக கிடந்தவர் நாகர்கோவில் அடுத்த கண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த புரோஸ்கான் (வயது 65), ஓய்வு பெற்ற பேராசிரியர் என்பது தெரியவந்தது.புரோஸ்கான் நேற்று வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெளியே செல்வதாக கூறி புறப்பட்டார். பின்னர் கண்ணன்குளம் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றின் அருகே வந்து மது அருந்தியதாக தெரிகிறது. இந்த நிலையில் அவர் கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.இதனால் புரோஸ்கான் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு யாராவது அவரை அங்கு அழைத்து வந்து கொலை செய்துவிட்டு கிணற்றில் தள்ளிவிட்டு சென்றார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா கட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் பிணத்தை போலீசார் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

 

Tags :

Share via