விளம்பர பேனர் அமைக்கும் போது மின்சாரம் தாக்கி உடல்கருகி பெங்களூரை சேர்ந்த 2 இளைஞர்கள் பலி.
வேலூர் ஜி.ஆர்.பாளையத்தை சேர்ந்த சரவணன் (37) என்பவர் ஊசூர், குளத்துமேடு பகுதியில் சொந்தமாக எஸ்.வி.எம் ஆயில் மற்றும் வாகனங்களுக்கான பேட்டரி விற்பனை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் தனியார் ஆயில் நிறுவனத்தின் (Castrol oil) விளம்பர பேனர் வைக்கும் ஊழியர்கள் 3 பேர் நேற்று (22.10.2023) இரவு சரவணன் கடையின் இரண்டாவது மாடி மீது அந்நிறுவனத்தின் சுமார் 10 அடி நீளம் 4 அடி அகலம் கொண்ட பேனரை பொறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதயாக பேனரின் கம்பிகள் கட்டிடத்தின் அருகே சென்ற மின் கம்பி மீது உரசியதில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் பெங்களூரை சேர்ந்த சலீம் (25), கௌஷிக் (27) ஆகிய இரண்டு இளைஞர்கள் தீ பற்றி எரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதனை கண்ட பொது மக்கள் உடனடியாக காவல் துறை மற்றும் மின்வாரியத்துக்கு தகவல் தெரிவித்ததோடு தீயை அணைத்துள்ளனர். பின்னர் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த அரியூர் காவல் துறையினர் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags : பெங்களூரை சேர்ந்த 2 இளைஞர்கள் பலி.