8வது மாடியிலிருந்து குதித்து பள்ளி மாணவன் தற்கொலை

by Staff / 06-03-2024 05:18:20pm
8வது மாடியிலிருந்து குதித்து பள்ளி மாணவன் தற்கொலை

பல்லாவரம்: பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் மென்பொறியாளர் னிவாச கிருஷ்ணகுமார். இவரது மனைவி சைனஜா. மகன் சூரம்புடி ஸ்ரீராம் (14). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், சூரம்புடி ராம் 8ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில், சமீப காலமாக படிப்பில் கவனம் செலுத்தாமல், சிறுவன் எந்நேரமும் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்ததால், அவனது தாய் கண்டித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவும், சிறுவன் பாடம் படிக்காமல் தொடர்ந்து செல்போனில் கேம் விளையாடி உள்ளான். இதைக் கண்ட தாய் சைனஜா, மகனை கடுமையாக கண்டித்துள்ளார்.

இதனால், மனமுடைந்த சிறுவன் சூரம்புடி ஸ்ரீராம், வீட்டில் அனைவரும் தூங்க சென்ற சமயத்தில் யாரும் எதிர்பாராத நேரத்தில் வீட்டின் 8வது மாடியிலிருந்து ஜன்னல் வழியாக கீழே குதித்துவிட்டான். சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், பலத்த காயமடைந்து வலியால் துடித்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து பல்லாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து விசாரிக்கின்றனர்.

 

Tags :

Share via