பத்தாண்டு கால பாஜக ஆட்சியில் சாமானிய மக்கள் தான் தூக்கத்தை தொலைத்தார்கள்-முதல்வர் மு.க.ஸ்டாலின்

by Editor / 31-03-2024 06:47:00am
பத்தாண்டு கால பாஜக ஆட்சியில் சாமானிய மக்கள் தான் தூக்கத்தை தொலைத்தார்கள்-முதல்வர் மு.க.ஸ்டாலின்

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கம் பாளையத்தில் சேலம், கிருஷ்ணகிரி தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற திமுக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில்  கலந்துக்கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:


வெற்றிக்கு தயாராகி விட்டீர்களா?  வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை நீங்கள் தந்தாக வேண்டும். தமிழ்நாட்டில் உண்மையான மக்களாட்சி நடைபெற்று வருகிறது. மாநில அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு திமுக அரசு தான் எடுத்துக்காட்டு. அரசு எப்படி செயல்படக்கூடாது என்பதற்கு பாஜக அரசு தான் உதாரணம்.  சேலத்திற்கு வந்த பிரதமர் மோடி தமிழகத்தில் பாஜகவுக்கு கிடைக்கும் ஆதரவை பார்த்து பாஜகவின் தூக்கம் தொலைந்து விட்டது. நாட்டின் அமைதியையும் மக்களின் நிம்மதியையும் தொலைத்தவர் மோடி.

பத்தாண்டு கால பாஜக ஆட்சியில் சாமானிய மக்கள் தான் தூக்கத்தை தொலைத்தார்கள். உச்சநீதிமன்றத்தால் தேர்தல் பத்திரம் தொடர்பாக தூக்கத்தை தொலைத்து உள்ளனர். மோடிக்கு உளவுத்துறை கொடுத்த செய்தி உள்ளது. தேர்தல் பத்திரங்கள் வெளியிட்ட பிறகு பாஜக வெற்றி பெற முடியாது என்று உளவுத்துறை தகவல் கொடுத்துள்ளது. நோட்டாவை விட குறைந்து ஓட்டுகள் வாங்கிவிடும் என்று பயம் மோடிக்கு உள்ளது. எம்ஜிஆரை ஜெயலலிதாவையும் மோடி புகழ்ந்து பேசுகிறார் ஏன் திடீரென புகழ்ந்து பேச வேண்டும். ஏன் மோடிக்கு பாசம் பொங்குகிறது. ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது அவரை பாராட்டியது உண்டா. இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த ஆட்சி ஜெயலலிதாவின் ஆட்சி என்று சொன்னது மோடி இது ஞாபகம் இல்லையா. தமிழ்நாட்டில் உட்கட்டமைப்பு வசதி வளராததுக்கு ஜெயலலிதா தான் காரணம் என்று குறை சொன்னர்கள். மீனவர்கள் தாக்கப்பட்டதற்கு சோனியா காந்தியும் ஜெயலலிதாவும் தான் காரணம் என குற்றம் சாட்டினார். இப்படிப் பேசி விட்டு எதற்கு இந்த நாடகம்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய்விட்டது என்று புதிய அவதூறு பிரச்சாரத்தைக் கிளப்பியிருக்கிறார். அதற்கு ஏதாவது தரவுகளை ஆதாரமாகச் சொல்கிறாரா? இல்லையே! பா.ஜ.க ஆளும் மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்தது! அப்போது நீங்கள் எங்கு சென்றீர்கள்? அந்த மாநில முதலமைச்சரைக் குறைந்தபட்சம் பதவி விலக வைக்க முடிந்ததா? இதுவரை நடக்காத கொடூரமாக, பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்றார்களே, அப்போது சட்டம்-ஒழுங்கு சந்தி சிரித்ததே… அப்போது ஒரு நாட்டின் பிரதமராக நீங்கள் என்ன செய்தீர்கள்? வாயே திறக்கவில்லையே!

பா.ஜ.க.ஆளும் மாநிலங்கள் போன்று, சட்டம்-ஒழுங்கு சீர்குலையாமல் சமூக நல்லிணக்கத்துடன் மக்கள் வாழும் அமைதியான தமிழ்நாட்டை உங்களுக்குப் பிடிக்கவில்லையா? என் கையில் ஒரு பட்டியலே இருக்கிறது. நான் ஆதாரத்துடன்தான் பேசுவேன். வாய்க்கு வந்தபடி எல்லாம் உளறிவிட்டு போகமாட்டேன். ஏனென்றால் நான் தலைவர் கருணாநிதியின் மகன். இதில் இருக்கும் பெயர் பட்டியல் ஏதோ தேசத் தலைவர்களோ.. சமூகச் சேவகர்களோ இல்லை.. எல்லோரும் சட்டம் ஒழுங்கைக் கெடுக்கும் ரவுடிகள்! சரித்திரப் பதிவேடு (History Sheet) குற்றவாளிகள்! நான் சொல்வதில் தவறு என கூறினால், தைரியம் இருந்தால் தெம்பு இருந்தால், திராணி இருந்தால் என் மேல வழக்கு போட்டு பாருங்கள், நான் நீதிமன்றத்தில் சந்திக்க தயாராக இருக்கிறேன்.

ஆனால் இந்தப் பட்டியலில் இருப்பவர்கள் எல்லாம், இப்போது எங்கு இருக்கிறார்கள் தெரியுமா? அத்தனை பேரும் பா.ஜ.கவில்தான் இருக்கிறார்கள்! வழக்கமாக இந்த ரௌடிகள் பட்டியல் காவல் நிலையத்தில்தான் ஒட்டப்பட்டிருக்கும். 32 பக்கங்கள் கொண்ட இந்தப் பட்டியலில், 1977 வழக்குகள் இருக்கும் 261 ரவுடிகள் இருக்கிறார்கள். இவர்களின் பெயர் என்ன? பா.ஜ.கவில் என்ன பொறுப்பில் இருக்கிறார்கள்? இவர்கள் மேல் என்ன என்ன பிரிவுகளில் வழக்குகள் இருக்கிறது? என்று இந்தப் பட்டியலில் தெளிவாக இருக்கிறது. எல்லா ரவுடிகளையும் உங்கள் கட்சியில் வைத்துக் கொண்டு சட்டம் ஒழுங்கைப் பற்றி நீங்கள் பேசலாமா?

நான் சொல்வதில் சந்தேகம் இருந்தால் உங்களிடம் இருக்கும் உளவுத்துறை மூலமாக இந்தப் புத்தகத்தை வாங்கி கிராஸ் வெரிஃபை செய்துவிட்டு அதற்குப் பிறகு எங்களைப் பற்றி பேசுங்கள் பிரதமர் மோடி அவர்களே!

அடுத்துப் போதை பழக்கம் குறித்து பேசி இருக்கிறார் திமுகவில் உள்ளவர் மீது இதுபோன்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அடுத்த நிமிடமே கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் மீதான விசாரணைக்கு நாங்கள் தடையாக இல்லை.தமிழ்நாட்டில் போதை பொருள் அதிகமாக இருப்பதாக ஒரு அவதூறு பரப்புகின்றனர். நீங்கள் செய்யும் பிரசாரம் பிரதமர் பதவிக்கு அழகல்ல. இந்தியாவுக்கே போதை பொருள் குஜராத்தில் இருந்து தான் வருகிறது என்று பிடிக்கப்படுகிறது. குஜராத்தின் முதலமைச்சர் ஆக இருந்தது நீங்கள் தானே. இப்பவும் பாஜக ஆட்சி தான் நடைபெறுகிறது. இதைப் பற்றி வாய் திருப்பீர்களா? பாஜக ஆளும் மாநிலங்களில் போதைப் பொருள் அதிகம் விற்பனையாவதாக புள்ளிவிவரங்கள் வந்துள்ளன.

தமிழ்நாட்டில் போதைப் பொருள் தொடர்பாக பாஜகவை சேர்ந்தவர்கள் 14 பேர் சிறையில் உள்ளனர். இதற்கு மோடி என்ன விளக்கம் அளிப்பார். பிரதமர் என்பது ஒரு உயர்ந்த பதவி. பிரதமர் மோடி சாதனைகள் சொல்ல வழியில்லை என்பதால் வாய்க்கு வந்தபடி பேசுகிறார். பாஜக பற்றியும் மோடியை பற்றியும் பேச எடப்பாடி பழனிசாமிக்கு எஜமான் விசுவாசம் தடுக்கிறது. தமிழகத்தில் அதிமுகவின் ஆட்சி இருண்ட காலம். துப்பாக்கிச் சூடு, கொடநாடு கொலை கொள்ளை, பொள்ளாச்சி கற்பழிப்பு சம்பவம் என ஒட்டுமொத்தமாக நிர்வாகம் முடங்கிய ஆட்சி தான் எடப்பாடி பழனிசாமி ஆட்சி.

தன் பதவி சுகத்துக்காக தமிழ்நாட்டை அடமானம் வைத்தவர் தான் எடப்பாடி பழனிசாமி. இப்படிப்பட்ட பழனிசாமிக்கு வாக்களிக்க மக்கள் தயாராக இல்லை. உண்மையான அதிமுக தொண்டர்களும் தயாராக இல்லை. தமிழ்நாட்டின் பொற்காலம் என்பது திமுக ஆட்சி தான். தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகள் பெருகியது திமுக ஆட்சியில் தான். தமிழகத்தில் கல்வி அறிவு வளர்ச்சிக்கு வித்திட்டது திமுக ஆட்சி தான். தமிழகத்தின் பல திட்டங்கள் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டன. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கிக் கொண்டது திமுக ஆட்சியில் தான்.

எங்கும் இந்தி எதிலும் ஹிந்தி என்பதை பாஜக ஆட்சி உருவாக்கி விட்டது. திமுக ஆட்சியில் தமிழகம் வளர்ச்சி பெற்று உள்ளது. மத்திய அரசு அளித்த புள்ளிவிவரம் வைத்து சொல்கிறேன். கடந்த மூன்று ஆண்டுகளில் 77 லட்சத்து 78 ஆயிரத்து 999 வேலைவாய்ப்புகள் தனியார் துறையில் பெற்றுள்ளனர் என புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இப்படி சாதனைகளை செய்து வருவது தான் திமுக ஆட்சி. திமுக இருக்கும் வரை தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது. சமூக நீதிப் பேசும் ராமதாஸ் சமூக நீதிக்கு எதிரான பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்? பாஜக, பாமக அமைத்திருப்பது சந்தர்ப்பவாத கூட்டணி. இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

 

Tags : பத்தாண்டு கால பாஜக ஆட்சியில் சாமானிய மக்கள் தான் தூக்கத்தை தொலைத்தார்கள்.

Share via