இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம்: கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது

by Admin / 05-08-2021 04:02:51pm
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம்: கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது



   
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது மற்றும் ஆபாச வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டது தொடர்பாக கல்லூரி மாணவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மேலமடையை சேர்ந்த பிளஸ்-2 மாணவி, தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

 நான் இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கத்தில் கணக்கு ஒன்றை வைத்து உள்ளேன். இதில் எனக்கு பலர் நண்பர்களாக உள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் ஒத்தவீடு பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது 20) என்பவர் எனக்கு அறிமுகம் ஆனார். நாங்கள் 2 பேரும் நெருங்கி பழகினோம். இது நாளடைவில் காதலாக மலர்ந்தது. கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தோம்.

இந்த நிலையில் சந்தோஷ்குமார் நான் வசிக்கும் அதே தெருவில் வீடு எடுத்து தங்கினார். அப்போது அவர் என்னை ஒரு தடவை வீட்டுக்கு வருமாறு அழைத்தார். நான் அங்கு சென்றேன். அப்போது அங்கு யாரும் இல்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு சந்தோஷ்குமார் என்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை.

அப்போது சந்தோஷ் குமார் “நான் உன்னை நிச்சயமாக திருமணம் செய்து கொள்கிறேன்” என்று வாக்குறுதி கொடுத்தார். இதனை நம்பினேன். அப்போது அவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்.

அதன் பிறகு நாங்கள் 2 பேரும் சகஜமாகவே பழகி வந்தோம். இந்த நிலையில் நான் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆய்வு செய்தேன். அப்போது அதில் நானும் சந்தோஷ்குமாரும் ஒன்றாக இருக்கும் அந்தரங்க வீடியோ பதிவிடப்பட்டு இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நான் இதுதொடர்பாக சந்தோஷ் குமாரிடம் கேட்டேன்.

அப்போது அவர் “எனக்கு பணம் தேவைப்படுகிறது. நான் கேட்ட தொகையை கொடுத்தால் உடனடியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள ஆபாச வீடியோவை நீக்கி விடுகிறேன்” என்று தெரிவித்தார். நான் அவருக்கு 3 தவணைகளில் ரூ50 ஆயிரம் கொடுத்து உள்ளேன்.

இதனை தொடர்ந்து அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த ஆபாச வீடியோவை நீக்கிவிட்டார். அடுத்த சில மாதங்களுக்கு பிறகு சந்தோஷ்குமார் என்னிடம் பணம் கேட்டு மீண்டும் நெருக்கடி கொடுத்தார். அப்போது “நான் போலீசில் புகார் கொடுப்பேன்” என்று எச்சரித்தேன். அதன்பிறகு அவர் என்னுடன் பேசுவது இல்லை.

இந்த நிலையில் சந்தோஷ்குமாரின் நண்பர் ராகுல் என்பவர் என்னை செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது அவர் “நீயும் சந்தோசும் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோ என்னிடம் உள்ளது. எனக்கும் பணம் கொடு. இல்லையெனில் அந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து விடுவேன்” என்று மிரட்டினார். நான் மறுத்து விட்டேன். இதையடுத்து ராகுல் அந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதனை தொடர்ந்து சந்தோஷ்குமார், ராகுல் ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Tags :

Share via