ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்த எடப்பாடி -ஓ பி எஸ். திமுக அரசு பழி வாங்குவதாக புகார் 

by Editor / 19-08-2021 05:03:18pm
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்த எடப்பாடி -ஓ பி எஸ். திமுக அரசு பழி வாங்குவதாக புகார் 

 

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் விளக்கம்.அளித்தனர்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சந்தித்தனர். இதில், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த சந்திப்பானது சுமார் 45 நிமிடங்கள் நிகழ்ந்துள்ளது.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்து, ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஊழல் மூலம் தங்கள் பாக்கெட்டுகளை நிரப்புவதில் மும்மரமாக உள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திமுக அரசு, அதிமுகவினர் மீது தொடர்ந்து வழக்குகள் போடப்படுகிறது.
ஊழல், வசூல் செய்தல், பழிவாங்குதல் தான் திமுக அரசின் குறிக்கோள். இதைத்தான் திமுக தற்போது செய்து வருகிறது. திமுக அரசின் சாதனை 100 நாட்களில் வசூல் செய்தது தான். தமிழகம் முழுவதும் அரசு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தது தான் திமுக அரசின் 100 நாள் சாதனை. திமுக அரசு பொறுப்பேற்ற 100 நாட்களில் மக்கள், வேதனையும், சோதனையும் தான் பெரும்பாலும் அடைந்துள்ளார்கள்.
அதிமுகவினரை பழிவாங்கும் நோக்கில் திமுக அரசு வழக்குகளை தொடுக்கிறது. ஊழல், வழக்கு, பழிவாங்குதல் என்ற அடிப்படையில் திமுக அரசு நடந்து கொள்கிறது. கடந்த கால அதிமுகவின் ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை முடக்கி வைத்துள்ளார்கள். ஊரக வேலை திட்டத்தை திமுக அரசு முடக்கி வைத்துள்ளது. அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்குகளை போடுகிறது.
திமுக தேர்தல் அறிக்கைகைக்கும் கோடநாடு வழக்கிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கோடநாடு வழக்கு என்பது நீதிமன்றத்தில் உள்ளது. அதை எப்படி தேர்தல் வாக்குறுதியாக திமுக அளிக்க முடியும்?. கோடநாடு வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது கேரளாவில் ஏற்கனவே வழக்குகள் உள்ளன. இந்த வழக்கு நீதிமன்றத்தில் முடியும் தருவாயில் இருக்கும் நிலையில், பொய் குற்றசாட்டு கூறுகிறார்கள்.
கோடநாடு வழக்கில் சயானுக்கு ஆதரவாக திமுக வழக்கறிஞர்கள் வாதாடி வருகின்றனர். குற்றவாளிகளை பாதுகாக்கும் வகையில் திமுக அரசு நடந்து கொள்கிறது. உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என்றால் இதுவரை பிடித்தது போலி குற்றவாளிகளா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தம்மையும், சிலரையும் சேர்க்க சதி திட்டம் நடப்பதாக உள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு, குறுக்கு வழியில் இந்த வலக்கை திசை திருப்ப திமுகவினர் முயற்சி செய்து வருகின்றனர். கோடநாடு வழக்கை மீண்டும் விசாரிக்க எந்த நீதிமன்றம் அனுமதி அளித்தது என்று கேள்வி எழுப்பினார்.
நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறிய திமுகவினர் குறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினேன். நீட் தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு அளித்துவிட்டது. திமுக பொய்யான வாக்குறுதியை தந்துள்ளது. சமூக வலைதளத்தில் போட்ட பழைய பதிவுகளை வைத்து அதிமுகவினர் மீது வழக்கு போடுகின்றனர். திமுகவின் வெள்ளை அறிக்கை மக்களிடம் எடுபடவில்லை என ஆளுநரை சந்திப்பின் விளக்கமளித்தார்.

 

Tags :

Share via