காதலன் வீட்டு முன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட காதலி: கண் முன்னே உயிர் போவதை பார்த்து கண்டுகொள்ளாமல் இருந்த காதலன் குடும்பம்…

by 1tamilnews செய்திகள் / 31-08-2021 04:43:37pm
காதலன் வீட்டு முன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட காதலி: கண் முன்னே உயிர் போவதை பார்த்து கண்டுகொள்ளாமல் இருந்த காதலன் குடும்பம்…



தர்மபுரி அருகே திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டு முன் விஷம் குடித்து காதலி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த ராஜகொல்லஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த காவிரியப்பன் மகள்  ஞானமொழி பிடெக் முடித்துவிட்டு பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில், மென்பொறியாளராக பணியாற்றி வரும் இவர், குட்டூர் பகுதியைச் சேர்ந்த தனது தாய்மாமன்  மகன் முரளிதரனும் கடந்த 13 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

தற்போது முரளிதரன் ஜார்க்கண்ட் மாநிலத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 13 வருடங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இவர்களது காதலுக்கு முரளிதரன் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு பெண்ணை திருமணத்திற்கு நிச்சயம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து 13 ஆண்டுகளாக காதலித்து உள்ள தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென முரளிதரனிடம் ஞானமொழி அடிக்கடி வலியுறுத்தியுள்ளார். ஆனால் முரளிதரன் தனக்கு வீட்டில் வேறொரு பெண்ணை திருமணம் செய்வதற்காக நிச்சய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளார்.

 தொடர்ந்து கொரோனா பெருந்தொற்றால் ஞானமொழி வீட்டிலிருந்து பணி செய்து வந்துள்ளார். கடந்த வாரம் ஞானமொழியின் தம்பிக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், மீண்டும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு முரளிதரனிடம் வலியுறுத்தியுள்ளார். இதற்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என முரளிதரன் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த ஞானமொழி ஆன்லைனில் விஷ மருந்து வாங்கியதாக கூறப்படுகிறது. நேற்று குட்டூர் கிராமத்திற்குச் சென்று முரளிதரன் வீட்டின் முன்பு தன்னை திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்ததால், தற்கொலை செய்து கொள்கிறேன் என வீட்டின் முன்பு விஷம் அருந்தியுள்ளார்.

 அப்பொழுது முரளிதரன் வீட்டில் இருந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஞானமொழி விஷம் அருந்துவதை கண்டு வீட்டிற்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டுள்ளனர். தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஞானமொழி துடிதுடித்து இறந்துள்ளார்.

 
இதைத் தொடர்ந்து ஞானமொழியின் தாய்க்கு தகவல் கிடைத்துள்ளது. தொடர்ந்து ஞானமொழியை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்து வந்துள்ளனர். ஆனால் ஞானமொழியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

 தொடர்ந்து 13 ஆண்டுகள் காதலித்து விட்டு தனது மகளை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்ட காரணத்தினால், ஞானமொழி விஷமருந்தி உயிரிழந்துள்ளார். இதனை கண்ட முரளிதரனின் குடும்பத்தினர் ஞான மொழியை காப்பாற்றாமல், யாருக்கும் தகவல் கொடுக்காமலும் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் காவல் துறையினர் ஞான மொழியின் இறப்பை சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனை அறிந்த ஞான மொழியின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பிரேதப் பரிசோதனை அறையில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் முரளிதரன் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியது மற்றும் கடந்த 13 ஆண்டுகளில் இருவரும் பழகியது அனைத்திற்கும் தேவையான ஆதாரங்கள் உள்ளது. எனவே காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். காதலித்து திருமணம் செய்து கொள்ள மறுத்ததால், காதலன் வீட்டு முன் பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via