கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கணவரை கொலை செய்த மனைவி கைது

by Admin / 08-09-2021 06:58:53pm
கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கணவரை கொலை செய்த மனைவி கைது

 


மதுபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம் அடைந்த பெண், கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கணவரை கொலை செய்தார்.இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது;-

நாமக்கல் ஏ.எஸ்.பேட்டை பகுதியை சேர்ந்தவர் தங்கராசு (வயது 45). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி செல்வராணி (40). இவர்களுக்கு 15 வயதில் மகனும், 16 வயதில் மகளும் உள்ளனர். தங்கராசுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 2-ந் தேதி மாலையில் தங்கராசு மதுபோதையில் வீட்டுக்கு வந்ததாக தெரிகிறது. அப்போது மனைவியிடம் அவர் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே சமையல் செய்வதற்கு பயன்படுத்தப்படும் எண்ணெயை ஒரு பாத்திரத்தில் வைத்து செல்வராணி சூடுப்படுத்தி கொண்டிருந்தார். அப்போது தங்கராசு தொடர்ந்து தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த செல்வராணி, அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த எண்ணெயை பாத்திரத்துடன் தூக்கி தங்கராசு மீது ஊற்றியதாக தெரிகிறது.

இதில் தங்கராசு உடல் வெந்து வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். இந்த சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தங்கராசுவை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையே நாமக்கல் 2-வது குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு கபாலீசுவரன், தங்கராசுவிடம் வாக்குமூலம் வாங்கினார். அப்போது குடும்ப தகராறில் தன்னுடைய மனைவி கொதிக்கும் எண்ணெயை ஊற்றியதாக அவர் கூறினார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் தங்கராசு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக நாமக்கல் போலீசார் செல்வராணி மீது கொலை வழக்குப்பதிவு செய்ததுடன், அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், சம்பவத்தன்று மதுபோதையில் செல்வராணியை தங்கராசு தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த செல்வராணி, கொதிக்கும் எண்ணெயை கணவர் மீது ஊற்றியதும், காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்ததும் தெரியவந்தது. இருந்தாலும் கொலைக்கான காரணம் வேறு ஏதாவது இருக்குமா? என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via