அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய வாலிபர் கைது

by Editor / 25-09-2021 07:13:28pm
அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய வாலிபர் கைது


தூத்துக்குடி அருகே அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடி சமூக வலைதளத்தில் பரப்பியவரை போலீசார் கைது செய்தனர். 


தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கச்சேரி தளவாய்புரம் தெற்குத் தெருவைச் சேர்ந்த சுடலைமணி மகன் கலைச் செல்வன் (20) என்பவர் கடந்த 19.09.2021 அன்று தன்னுடைய பிறந்த நாளை, தனது நண்பர்களுடன் சேர்ந்து இருசக்கர வாகனத்தின் சீட்டில் கேக் வைத்து அரிவாளால் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதனை செல்போனிலும் வீடியோவாக எடுத்து பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்படும் வகையில் வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு பரப்பியுள்ளார்.


இந்த வீடியோ சமூக வலை தளங்களில் பரவி வருவதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார் மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளருக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.அதன்பேரில்  துணை கண்காணிப்பாளர் சங்கர் மேற் பார்வையில் ஓட்டப்பிடாரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் எபனேசர் தலையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு கலைச்செல்வன் என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 5 அரிவாள் மற்றும் அதற்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.


இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் ஈடுபடுவது பொது அமைதிக்கு பங்கத்தை ஏற்படுத்தும், இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு கைதாகும் இளைஞர்களின் எதிர்காலமும் பாதிக்கப்படும். எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீதும், ஜாதி, மத மோதல்களை தூண்டும் வகையிலோ அல்லது உண்மைக்கு புறம்பான செய்திகளை ஆடியோ மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.

 

Tags :

Share via