6429 கிராம பஞ்சாயத்துகளில் ‘கண்ணாடி இழை கம்பி வடம்’ அமைக்கும் பணிஒப்பந்தம்

by Editor / 20-10-2021 04:28:15pm
6429 கிராம பஞ்சாயத்துகளில் ‘கண்ணாடி இழை கம்பி வடம்’ அமைக்கும் பணிஒப்பந்தம்

 


முதல்கட்டமாக 6429 கிராம பஞ்சாயத்துகளில் கண்ணாடி இழை கம்பி வடம் அமைக்கும் பணிக்காக அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.


தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம், தமிழ்நாட்டில் பாரத்நெட் திட்டத்தை செயல்படுத்தவுள்ள திட்ட ஒருங்கிணைப்பாளர்களான எல் அண்ட் டி (தொகுப்பு சி), ஐ.டி.ஐ. (தொகுப்பு டி) மற்றும் மூன்றாமவர் முகமையான ‘பெசில்’ ஆகிய நிறுவனங்களுடன், முதன்மை சேவை ஒப்பந்தங்களை  தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் முன்னிலையில் கையெழுத்திட்டது.


இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கூறுகையில், "பாரத்நெட்" திட்டம் என்பது, தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 525 கிராம பஞ்சாயத்துகளையும் "கண்ணாடி இழை கம்பி வடம்" மூலம் இணைத்து, அதிவேக அலைக்கற்றை வழங்கும் திட்டமாகும். இத்திட்டத்தினை “தமிழ்நாடு கண்ணாடி இழை வலை யமைப்பு நிறுவனம் என்ற சிறப்பு நோக்கு நிறுவனம், ரூ.1815.32 கோடி செலவில் செயல்படுத்தும். இத்திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் 1 ஜி.பி.பி.எஸ். அளவிலான அலைக்கற்றை அனைத்து கிராமப்பஞ்சாயத்துகளிலும் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.


இத்திட்டத்தினை செயல்படுத்தும் வகையில்மாவட்டங்கள் வாரியாக நான்கு தொகுப்புகள் (ஏ, பி, சி & டி) பிரிக்கப்பட்டு, தொகுப்புக்கு ஒருவர் என நான்கு திட்ட ஒருங்கிணைப்பாளர்களும், தணிக்கை மற்றும் ஆய்வு செய்ய மூன்றாமவர் முகமையும் தெரிவு செய்யப்பட்டது.


தற்சமயம், தொகுப்பு சி & டி -ல் திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது. தொகுப்பு சி -ன் கீழ், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை நாமக்கல், கரூர், கோவை, திருப்பூர், திருச்சி மாவட்டங்களில் 3 ஆயிரத்து 326 கிராம பஞ்சாயத்துகளும்,


தொகுப்பு டி -இன் கீழ், கன்னியா குமரி, மதுரை, ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருது நகர், தென்காசி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் 3 ஆயிரத்து 103 கிராம பஞ்சாயத்துகளும், பாரத்நெட் திட்டத்தின் மூலம் இணைக்கப்பட்டு 1 ஜி.பி.பி.எஸ். அளவிலான அலைக்கற்றை சேவை வழங்கப்படும்.தொகுப்பு ஏ மற்றும் தொகுப்பு பி ல், நிலுவையில் உள்ள மேல் முறையீட்டு வழக்குகள் முடிவுக்கு வந்தப்பின்னர், தமிழக்தில் உள்ள அனைத்து 12 ஆயிரத்து 525 கிராமப்பஞ்சாயத்துகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.


பாரத்நெட் திட்டத்தின் மூலம், அனைத்து கிராமப்புறங்களுக்கும், மலிவான மற்றும் தரமான “டிஜிட்டல்” சேவைகள், மின் கல்வி (e -Education), தொலை மருத்துவம், இணையதள இணைப்பின் மூலம் மூன்று விதமான சேவைகள் ஆகிய சேவைகளை வழங்க முடியும்.


மேலும், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள், அதிவேக இணையதள சேவையினை பெற முடியும். இத்தகைய சேவைகளை வழங்குவதன் மூலம், ஊரக வேலைவாய்ப்பு மற்றும் அரசின் பல்வேறு திட்டங்கள் மக்களை விரைந்து சென்றடைய இத்திட்டம் வழி வகுக்கும் என்று தெரிவித்தார்.

 

Tags :

Share via