வட மாநில இளைஞர் கொலை ஊராட்சிமன்ற தலைவரின் மகன் கைது

by Admin / 06-03-2022 11:41:26am
 வட மாநில இளைஞர் கொலை ஊராட்சிமன்ற தலைவரின் மகன் கைது

திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அடுத்த கீழச்சேரியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஏராளமானோர் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். 

இந்த நிறுவனங்களில் ஊழியர்களை பணியமர்த்துவதில் 6 ஒப்பந்ததாரர்கள் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சுங்குவார்சத்திரம் பகுதியைச் சேர்ந்த நரேஷ் என்பவர் ஒப்பந்தம் செய்து அதிக அளவில் வடமாநில இளைஞர்களை பணியமர்த்தி வந்துள்ளார். 

இதற்கு அப்பகுதியை சேர்ந்த முத்தீஷ் மற்றும் பிரபு ஆகிய இருவரும் கூடுதலாக தங்களுக்கு ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்ற தொழிற்சாலையில் மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரிகளுடன் சண்டையிட்டதாக கூறப்பட்டது.

அதற்கு அவர் ஓர் ஆண்டுக்கு பிறகு தருவதாக தெரிவித்ததையடுத்து, ஆத்திரம் அடைந்த முகேஷ் மற்றும் பிரபு ஆகியோர் தனது கூட்டாளியுடன் கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி வடமாநில இளைஞர்கள் தங்கி உள்ள பேரம்பாக்கம் பகுதிக்கு சென்று அவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
 
இதில் அப்துல்அசின் என்ற வடமாநில இளைஞர் படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இந்த கொலை வழக்கில் தொடர்புடைய முத்தீஷ்(27), பிரபு(33), தினேஷ்(29), சிமியோன்(21), திவாகர்(25), ராஜேஷ்(29), தினேஷ்(24), சூர்யா(29), முகேஷ்(24), பிரகாஷ்(19) ஸ்டீபன்(29) ஆகிய 11 பேரை கைது செய்து திருத்தணி கிளை சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய இருவரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் கீழச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் தேவிகலா ஆரோக்கியசாமி அவருடைய மகன் தேவா என்கிற தேவாஆரோக்கியம் (25) என்பவரை மூன்று மாதங்கள் கழித்து கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via