போலி போதகர் கள்ளக்காதலியுடன் போலீசில் தஞ்சம்

by Editor / 09-11-2022 09:11:29am
போலி போதகர் கள்ளக்காதலியுடன் போலீசில் தஞ்சம்

கொல்லங்கோடு அருகே மஞ்ச தோப்பு காலனி பகுதியை சேர்ந்த 47 வயதான ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது 45 வயது மனைவி, 24 வயது மகள், 23 வயது மகனுடன் வசித்து வந்தார். மகளை திருமணம் செய்து கொடுத்து விட்டு அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மகன் வெளிநாட்டில் உள்ளார். ஆட்டோ டிரைவருக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இதய கோளாறு ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு ஆட்டோவை வீட்டின் முன் நிறுத்தி அவசர தேவைகளுக்கு மட்டும் சவாரி செல்வது வழக்கம்.


இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இவரது வீட்டின் அருகில் உள்ள ததேயுபுரம் மீனவ கிராமத்தை சேர்ந்த சுமார் 45 வயது உடைய ஒரு நபர் பிரார்த்தனை செய்வதற்காக ஆட்டோ டிரைவர் வீட்டில் சென்று உள்ளார். அதன் பிறகு தொடர்ந்து பிரார்த்தனை செய்ய செல்வது வழக்கமாம்.
இந்த நிலையில் ஆட்டோ டிரைவர் கடந்த 28ஆம் தேதி காலையில் சவாரி சென்று விட்டு வீடு வந்துள்ளார். அப்போது வீடு பூட்டப்பட்டு கிடந்தது. மதியம் வரையிலும் மனைவி வீட்டுக்கு வராததால் போன் செய்துள்ளார். அப்போது மனைவியின் போன் சுவிட்ச் ஆஃப் ஆகி இருந்துள்ளது. சந்தேகம் அடைந்த ஆட்டோ டிரைவர் சுற்றுவட்டாரப் பகுதியிலும் உறவினர்கள் வீடுகளிலும் தேடிப் பார்த்துள்ளார்.

மனைவி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. பின்னர் போதகரும் தனது வீட்டிற்கு ஜெபம் செய்ய வராமல் இருந்ததால் ததேயுபுரம் சென்று போதகரின் வீட்டில் ஆட்டோ டிரைவர் விசாரித்துள்ளார்.
அப்போது 28ஆம் தேதி காலையில் வீட்டிலிருந்து சென்ற போதகர் அதன் பிறகு வீட்டிற்கு செல்லவில்லை என்று அங்கு உள்ளவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஆட்டோ டிரைவரின் மனைவி திருமணமான தனது மகளுக்கு போன் செய்து, தான் பாஸ்டர் உடன் தேங்காப்பட்டணம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.


இது குறித்து ஆட்டோ டிரைவர் கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் சி எஸ் ஆர் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை போலி போதகர் உடன் அந்த 45 வயது பெண் கொல்லங்கோடு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். முதிர்ந்த கள்ளக்காதல் ஜோடியிடம் போலீசார் விசாரித்த போது, போலீஸ் தங்களை தேடியதால் தஞ்சம் அடைந்ததாக போலி போதகர் தெரிவித்தார்.


45 வயது பெண் போலீசில் கூறுகையில், - கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் அதனால் தான் கணவர் வீட்டிற்கு செல்லவில்லை என்று தெரிவித்து விட்டு அதை இருவரும் காவல் நிலையத்தில் எழுதி கொடுத்துவிட்டு சென்றனர்.


முதிர்ந்த கள்ளக்காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த சம்பவம் அறிந்து அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் காவல் நிலையத்தில் வந்து குவிந்தனர். கள்ளக்காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது

 

Tags :

Share via