மனைவியை கொன்றவர் கேரளாவில் பதுங்கல் 3 தனிப்படைகள் தேடல்

by Staff / 25-02-2023 04:02:10pm
மனைவியை கொன்றவர் கேரளாவில் பதுங்கல் 3 தனிப்படைகள் தேடல்

இரணியல் அருகே உள்ள குருந்தன்கோடு பகுதியைச் சேர்ந்தவர் மேனகா (வயது 39). இவரது முதல் கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். இவர்களுக்கு (12) வயதில் ஒரு மகள் உள்ளார். இதையடுத்து மேனகாகடந்து 8 ஆண்டுகளுக்கு முன்பு திக்கணங்கோட்டை சேர்ந்த ஜெயபால் (45) என்ற ஓட்டல் தொழிலாளியை 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு (7) வயதில் ஒரு மகன் உள்ளார்.

இந்த நிலையில் ஜெயபாலுக்கும் மேனகா விற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கணவரை பிரிந்து மேனகா தனது மகள் மகனுடன் குருந்தங்கோட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி குருந்தன்கோட்டில் உள்ள ஆலயத்திற்கு சென்று வந்த மேனகா மற்றும் குழந்தைகளை ஜெயபால் தடுத்து நிறுத்தினார். தனது மகனை தன்னுடன் அனுப்புமாறு தகராறு செய்தார். மகனை கொடுக்க முடியாது என மேனகா மறுப்பு தெரிவித்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த ஜெயபால் அரிவாளால் மேனகாவை சரமாரியாக வெட்டினார். மகளுக்கும் வெட்டுக்காயம் விழுந்தது. படுகாயம் அடைந்த இரண்டு பேரையும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதையடுத்து ஜெயபால் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மேனகாவை ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து இரணியில் போலீசார் ஜெயபால் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த மேனகா நேற்று பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.தலைமறைவாகியுள்ள ஜெயபாலை பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது. தனிப்படை போலீசார் ஜெயபாலை தேடி வருகிறார்கள். அவர் கேரளாவில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

 

Tags :

Share via