விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரிய வகை குரங்குகள்.

by Staff / 22-03-2023 03:11:12pm
விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரிய வகை குரங்குகள்.


சென்னை மீனம்பக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் கன்காணித்தனர். அப்போது சுங்க இலாகா அதிகாரிகளுக்கு, தமிழகத்தை சேர்ந்த 2 பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டு, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள் அவர்களின் உடைமைகளை சோதனை செய்தனர்.

அப்போது அவர்களிடம் இருந்த ஒரு கூடையில் லேசாக அசைவது போல் தெரிந்ததையடுத்து சுங்க இலாக அதிகாரிகள் அதனை திறந்து பாா்த்தனா். அப்போது அதில் மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள சதுப்பு நில காடுகளில் வசிக்கும் டி பிரஸ்ஸாவின் குரங்கு, நைஜீரியா, கென்யா, உகாண்டா போன்ற நாடுகளில் வாழும் மாண்டட் கெரேசா என்ற குரங்கு, மத்திய மற்றும் தென் அமெரிக்கா, மெக்சிகோ, பிரேசில் ஆகிய நாடுகளில் வாழும் சிலந்தி குரங்கு என அரிய வகை 4 குரங்கு குட்டிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இது பற்றி பயணியிடம் விசாரித்த போது, அவர் இவை அபூர்வ வகை குட்டிகள் என்பதால், இவற்றை வீட்டில் வைத்து வளர்ப்பதற்காக எடுத்து வந்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் அவரிடம் அந்த விலங்குகளை எடுத்து வந்ததற்கான எந்த முறையான ஆவணங்களும் இல்லை.

குறிப்பாக விலங்குகளுக்கான மருத்துவ பரிசோதனை செய்து நோய்க் கிருமிகள் ஏதாவது இருக்கிறதா? இல்லையா? என்பதற்கான சான்றிதழ் ,சர்வதேச வனவிலங்குகள் பாதுகாப்பு துறையின் தடையில்லா சான்றிதழ் மற்றும் அவற்றை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு, இந்திய வனவிலங்கு துறை இடம் அனுமதி பெற்றதற்கான சான்றிதழ்கள் என எந்தவிதமான சான்றிதழ்களும் இல்லாததால் 4 குரங்கு குட்டிகளை பறிமுதல் செய்தனர்.பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சென்னையில் உள்ள மத்திய வனவிலங்கு குற்றப்பிரிவு துறை அதிகாரிகள், இவை அபூர்வ வகையை சேர்ந்தது என்று கூறினர். இதையடுத்து குரங்கு குட்டிகளை மீண்டும் மலேசிய நாட்டிற்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via