மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள்... உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி...

by Admin / 31-08-2021 04:41:40pm
மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள்... உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி...


 
நெல்லையை சேர்ந்த அப்துல் வஹாப் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் பள்ளிகளையும், கல்லூரிகளையும் திறக்கவும் தமிழக அரசு முடிவு செய்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது.  இரு தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்படாமல் மாணவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வது கொரோனா நோய்தொற்று பரவலை அதிகரிக்க செய்ய அதிக வாய்ப்புள்ளது.

ஒரு ஆண்டுக்கும் மேலாக ஆன்லைன் வழியாக பயில்வதற்கும், பயிற்றுவிக்கும் மாணவர்களும், ஆசிரியர்களும் நன்றாக பழகி விட்ட சூழலில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்றும், கல்லூரிகளை திறக்கவும் எடுக்கப்பட்டிருக்கும் முடிவு ஏற்கத்தக்கதல்ல. ஆகவே கொரோனா நோய்த்தொற்றின் மூன்றாம் அலை நெருங்கியுள்ளதைக் கருத்தில் கொண்டு, நேரடியாக அல்லாமல், ஆன்லைன் வழியாகவும் மாணவர்கள் வகுப்புகளை கவனிக்க அனுமதிக்கும் வகையில் வழிகாட்டல்களை வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசுத்தரப்பில்," பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறை சார்பில், சமூக இடைவெளியை பின்பற்றுவது, மாஸ்க் அணிவது உள்ளிட்ட வழிகாட்டல்கள் முறையாக பின்பற்றப்படும்.
 
50% குறைவாகவே மாணவர்கள் அழைக்கப்படுவர். அனைத்து ஆசிரியர்களும், மாணவர்களும் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது.

நீதிபதிகள், அரசு அனைத்து நிபுணர்களுடன் ஆலோசித்தே இத்தகைய முடிவை எடுத்துள்ளது. என தெரிவித்தனர். மனுதாரர் தரப்பில்," நேரடியாக வகுப்புகளுக்கு வருமாறு மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்பதே நோக்கம்" என தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள், இது குறித்து அரசுத்தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

Tags :

Share via