சுங்க சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை

by Editor / 02-09-2021 09:04:22pm
சுங்க சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை

....

தமிழகத்தில் உள்ள சுங்க சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று இன்று சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

இதற்காக மத்திய அமைச்சரை சந்திக்கவிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில் இன்று மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லா சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.

அவர் கூறும்போது, ‘15 ஆண்டுகளை கடந்த பிறகும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் கந்துவட்டிக்காரனுக்கு மேல் வசூலிக்கப்படுகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கும், தேவையில்லாத சுங்கச்சாவடிகளை அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த ஏப்ரல் மாதமும், செப்டம்பர் 1 -ந் தேதியில் இருந்தும் இந்த சுங்க கட்டணங்களில் விதிமுறைகளை மீறி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அரசு இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: -

நகர் பகுதிகளில் இருந்து 10 கி.மீட்டருக்குள் இருக்கும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்கிற விதி உள்ளது. இதையடுத்து பரனூர், வானகரம், சென்னசமுத்திரம், நெமிலி, சூரப்பட்டு உள்ளிட்ட 5 சுங்கச்சாவடிகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்காக டெல்லி சென்று முறையிட முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

தமிழகத்தில் நெடுஞ்சாலை விதிகளின்படி 16 சுங்கச்சாவடிகள் தான் இருக்க வேண்டும். ஆனால் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதனை கருத்தில்கொண்டு கூடுதலாக இருக்கும் சுங்கச்சாவடிகளை குறைக்கவும் மத்திய அரசிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கூறினார்.

 

Tags :

Share via