விதவை கற்பழித்து கொலை: போலீஸ்காரருக்கு தூக்கு 

by Editor / 01-10-2021 05:15:56pm
விதவை கற்பழித்து கொலை: போலீஸ்காரருக்கு தூக்கு 

 

பெங்களூருவில் விதவையை கற்பழித்துக் கொன்ற வழக்கில் தண்டனையை குறைக்க கோரிய முன்னாள் போலீஸ்காரரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் அவரது தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.


கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் போலீஸ்காரர் உமேஷ் ரெட்டி. இவர் பெங்களூரு போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த போது விதவைப் பெண் ஒருவரை கடந்த 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 ம் தேதி கற்பழித்து கொடூரமாக கொலை செய்திருந்தார்.


 இது தவிர சில பெண்களையும் ரமேஷ் ரெட்டி கற்பழித்து கொலை செய்ததாக வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வழக்கில் கடந்த 2007 ஆம் ஆண்டில் உமேஷ் ரெட்டிக்கு தூக்கு தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.


பின்னர் உமேஷ் ரெட்டியின் தாயார் தூக்கு தண்டனையிலிருந்து விலக்கு கோரி ஜனாதிபதிக்கு மனு ஒன்றை எழுதி அனுப்பியிருந்தார். அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கிடையில் இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று நீதிபதிகளிடம் உமேஷ் ரெட்டியின் வக்கீல் கோரிக்கையை விடுத்திருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ஆறு வார காலம் அவகாசம் அளித்துள்ளனர்.


இந்த ஆறு வாரத்திற்குள் உமேஷ் ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று அரசுக்கு கர்நாடக ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. உமேஷ் ரெட்டி மீது 21 பெண்களை கற்பழித்ததாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஹிண்டல்கா சிறையில் அடைக்கப்பட்டிருந்த உமேஷ் ரெட்டி சிறைக்குள் நிர்வாணமாக சுற்றித்திரிந்துள்ளார். 

 

Tags :

Share via