ஆன்லைன் ரம்மி- ஐ.டி. ஊழியர் தற்கொலை

by Editor / 10-10-2021 10:23:24am
ஆன்லைன் ரம்மி- ஐ.டி. ஊழியர் தற்கொலை

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள புருஷோத்தமகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவர் சென்னையில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (09/10/2021) நடைபெற்ற நிலையில், தனது வாக்கை செலுத்துவதற்காக சொந்த ஊருக்கு சென்ற ஆனந்தன், வாக்கை பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில், அவர் தனது வீட்டில் தொடர்ந்து செல்போன் மூலம் ஆன்லைன் ரம்மி விளையாடியுள்ளார். இதில் சிறிதளவு பணத்தைப் பெற்றுள்ளதால், மேலும் பணம் கிடைக்கும் என்ற நோக்கில் தனது வங்கி கணக்கில் இருந்து சுமார் 10 லட்சத்தை ஆன்லைன் ரம்மி மூலம் இழந்துள்ள ஆனந்தன், ரூபாய் 6 லட்சம் வெளியில் இருந்து கடன் வாங்கி ஆன்லைன் ரம்மியில் விளையாடியுள்ளார்.

ஆன்லைனில் ரம்மி விளையாடி பணத்தை இழந்ததை அறிந்த, அவரது பெற்றோர் மகனை கண்டித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த ஆனந்தன் செல்போனை உடைத்துவிட்டு, வீட்டில் உள்ள தனது அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர், இளைஞரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

Tags :

Share via