ராக்கிங்கில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை -டிஜிபி

by Editor / 16-11-2022 06:21:38am
ராக்கிங்கில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை -டிஜிபி

வேலூர் சிஎம்சி ராகிங் விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், இந்த பிரச்சினை தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து இரு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவமனை நிர்வாகத்துக்கு  அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

 இந்நிலையில், அனைத்து காவல்துறை மாவட்ட எஸ்பிக்களுக்கும், காவல் ஆணையர்களுக்கும், ஐஜிக்கள் மற்றும் சிபிசிஐடி ஏடிஜிபி, உளவுத்துறை ஏடிஜிபி என அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் ராக்கிங் பிரச்சினை நிகழாமல் தடுக்கவும், நடவடிக்கைகளைக் கடுமையாக்கவும் அதிரடி உத்தரவைப் பிறப்பித்து தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்களை விரிவாக பார்க்கலாம்:

1. ராக்கிங் சம்பவம் தொடர்பாக புகார்கள் மீது சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தாரால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் மீது திருப்தியடையாத பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் அளிக்கும் புகார் மீது உடனடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. கல்வி நிறுவனத்தினர் தரப்பில் ஏதேனும் அலட்சியம் காரணமாக காவல்துறையிடம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் வேண்டுமென்றே தாமதம் செய்தால், அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

3. ராக்கிங்கில் பாதிக்கப்பட்டவர் அல்லது அவரது பெற்றோர், பாதுகாவலர் நேரடியாக காவல்துறையிடம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய விரும்பினால், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. கல்வி நிறுவனத்தால் மனநல ஆலோசகர்கள் மூலம் மாணவர்களிடையே நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகள் மற்றும் முதலாமாண்டு மற்றும் சீனியர் மாணவர்களிடையே இணக்கம் ஏற்படும் கல்வி நிறுவனத்தாரால் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.

5. ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் ராக்கிங் தடுப்புக் குழு மற்றும் ராக்கிங் எதிர்ப்புப் படை இருக்க வேண்டும். கல்வி நிறுவனங்களில் ராகிங் தொடர்பான கண்காணிப்பு பிரிவு இருக்க வேண்டும்.

6. விடுதி கண்காணிப்பாளர் எல்லா நேரங்களிலும் அணுகக்கூடிய நிலையில் இருக்க வேண்டும் மற்றும் கல்வி நிறுவன பொறுப்பாளர்கள், ஆசிரிய உறுப்பினர்கள், ராகிங் எதிர்ப்புக் குழு உறுப்பினர்கள், மாவட்ட மற்றும் உட்கோட்ட அதிகாரிகள் மற்றும் மாநில அதிகாரிகளின் தொலைபேசி எண்களும் வெளிப்படையாக தெரிவிக்கப்பட வேண்டும்.

7. ராக்கிங்கில் ஈடுபடவோ அல்லது அதற்கு துணைபுரிந்து விடவோ கூடாது என்ற உறுதிமொழியைப் ஒவ்வொரு கல்வி ஆண்டின் தொடக்கத்திலும் ஒவ்வொரு மாணவருக்கு கையேடு, துண்டறிக்கை விநியோகிக்கப்பட்டு உறுதிமொழி படிவத்தில் கையொப்பம் பெறவேண்டும்.

8. மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வளாகத்தில் பல இடங்களில் பதாகைகள் விளம்பரங்கள் மூலமாக காட்சிப்படுத்த வேண்டும்.

9. ஒவ்வொரு விடுதியிலும் அல்லது அதன் அருகாமையில் முழுநேர விடுதிக் கண்காணிப்பாளர் தங்கி இருக்க வேண்டும் என்பதை கல்வி நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

10. மேலும், கல்வி நிறுவனங்களில் ராகிங் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் பின்வரும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை காவல்துறை பிறப்பித்துள்ளது.

* மாணவர்களிடையே ராக்கிங் எதிர்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.

* இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க மாவட்ட ராக்கிங் எதிர்ப்புக் குழுக்களும் செயல்படுத்தப்பட வேண்டும்.

* சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள், கல்வி நிறுவனங்களின் நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களை ஒருங்கிணைந்து மாணவர்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

* விழிப்புணர்வு ஏற்படுத்தும் போது அதிகார எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்கள் மற்றும் காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகளின் தொலைபேசி எண்கள், கல்வி நிறுவனங்களின் நிர்வாகத்தினரும் மற்றும் மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். அறிவிப்புப் பலகைகளில் தொலைபேசி மொபைல் வாட்ஸ் ஆப் எண்கள் குறிப்பிடப்பட வேண்டும்.

* கல்வி வளாகத்தின் முக்கியமான இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுவதை உறுதி செய்தல் வேண்டும்.

* பெறப்பட்ட புகார்களை முன்னுரிமை அடிப்படையில் விசாரிக்கப்பட வேண்டும்.

* பதிவு செய்யப்பட்ட வழக்குகள் விரைவில் முடிக்கப்பட வேண்டும். சட்டக் கருத்துக்கள் பெறுவதில் தாமதம் கூடாது.

* வழக்குகள் கோப்பில் எடுக்கப்படாத பட்சத்தில் நீதிமன்றத்தை அணுகி உடனடியாக கோப்புக்கு எடுக்கப்படவேண்டும்.

11. கல்வி நிறுவனங்களில் ராக்கிங் கலாசாரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும், மாநகர காவல் ஆணையர்களும், ராக்கிங் மற்றும் அது தொடர்பாக புகார்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இணைய வழி காவல் உதவி, இலவச உதவி எண்ணில் இருந்து பெறப்படும் புகார்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via