பெண்ணை அடித்துக் கொன்ற முதியவர் கைது

by Editor / 24-07-2021 06:07:57pm
 பெண்ணை அடித்துக் கொன்ற முதியவர் கைது

 


கோவில்பட்டி அருகே கட்டாலங்குளம் நடுத் தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகன் காளமேகம்(60). இவரது மனைவி ரெஜினா(47). கேரளாவில் கட்டடத் தொழிலாளியாக இருந்து வந்த காளமேகத்திற்கு மனநலம் பாதிக்கப்பட்டதையடுத்து, கடந்த சில மாதங்களாக அவர் வேலைக்குச் செல்லாமல் கட்டாலங்குளத்திலேயே இருந்து வருகிறார்.


இவருக்கும், கோவில்பட்டி 2ஆவது பங்களாத் தெருவைச் சேர்ந்த முத்தையா மகன் கருப்பசாமி(74) என்பவருக்கும் இடையே நிலப்பிரச்னை இருந்து வந்துள்ளது.இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் வசித்து வரும் காளமேகம் – ரெஜினா தம்பதி மகள் புனிதா கனகலட்சுமி , தனது பெற்றோருடன் பேசுவதற்காக செல்போனில் அழைத்து பேசியுள்ளார். அப்போது, ரெஜினா, தனது மகளிடம், நிலப்பிரச்னை சம்பந்தமாக கருப்பசாமி வீட்டிற்கு வந்த தகராறு செய்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, புனிதா கனகலட்சுமி மீண்டும்  செல்போனில் தொடர்பு கொண்ட போது, ரெஜினா ஃபோனை எடுக்கவில்லையாம். பலமுறை செல்போனில் அழைத்தும் பதில் இல்லாததையடுத்து, சந்தேகமடைந்த புனிதா கனகலட்சுமி, கட்டாலங்குளத்திற்குவந்தார்.


 அப்போது, வீட்டிற்குள் தனது தாய் இறந்த நிலையிலும், தந்தை காயமடைந்து மயங்கிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.பின்னர், இதுகுறித்து உடனடியாக நாலாட்டின்புதூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்த காளமேகத்தை மீட்டு கோவில்பட்டி அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ரெஜினா உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


சம்பவ இடத்தை மாவட்ட காவல் எஸ்.பி., ஜெயகுமார் பார்வையிட்டார்.பின்னர், புனிதா கனகலட்சுமி அளித்த புகாரின் பேரில், கருப்பசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், நிலப்பிரச்சனை சம்பந்தமாக ரெஜினாவிடம் பேசியபோது, உடன்பாடு ஏற்படாததையடுத்து, கோபத்தில் ரெஜினாவையும், அவரது கணவர் காளமேகத்தையும் இரும்புக்கம்பியால் தாக்கியதாக கருப்பசாமி கூறினார்.இதையடுத்து, போலீசார் கருப்பசாமியை கைது செய்தனர்.

 

Tags :

Share via