குழந்தையை கொன்று, தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு 7 ஆண்டு சிறை

by Staff / 27-10-2023 12:33:50pm
குழந்தையை கொன்று, தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு 7 ஆண்டு சிறை

பெங்களூருவைச் சேர்ந்த சந்திரசேகரனின் மனைவி பவித்ரா தன் 6 வயது மகள், 3 வயது மகன் ஆகியோரை அழைத்துக்கொண்டு 2019ஆம் ஆண்டு சென்னை வந்தபோது, மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளார்.
குடும்ப பிரச்சினை மற்றும் மன அழுத்தம் காரணமாக தனது மகளை கொலை செய்த பவித்ரா, மகனை கொலை செய்வதற்காக பிளேடால் கழுத்தில் அறுத்ததுடன், தன்னைத்தானே பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக மெரினா காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்தனர்.

மூவரையும் மீட்ட அப்பகுதியில் இருந்த குதிரை ஓட்டிகள் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், தாயும் மகனும் உயிர் பிழைத்தனர்.இந்த வழக்கின் விசாரணை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி T. H. முகமது பாரூக் முன்னிலையில் நடந்தபோது, காவல்துறை தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் ஆரத்தி பாஸ்கரன் ஆஜனார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, தனது மகளை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் குற்றசெயலில் ஈடுபடவில்லை என்பதால் கொலை என பதிவான வழக்கை, கொலை செய்யும் நோக்கமில்லாமல் தாக்குதல் என்ற பிரிவாக கருத வேண்டுமென உத்தரவிட்டதுடன், குடும்ப பிரச்சினை மற்றும் மன அழுத்தம் காரணமாக அவர் இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவதாக குறிப்பிட்டு, பவித்ராவுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

 

Tags :

Share via