சொத்து பிரச்சனை- வெடிகுண்டு வைத்து மருமகன் குடும்பத்தையே கொல்ல முயன்ற மாமனார்

by Admin / 21-08-2021 02:06:00pm
சொத்து பிரச்சனை- வெடிகுண்டு வைத்து மருமகன் குடும்பத்தையே கொல்ல முயன்ற மாமனார்

திருப்பத்தூர் அருகே நாட்டு வெடிகுண்டு வைத்து மருமகன் குடும்பத்தையே மாமனார் கொல்ல நினைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த கொண்டநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சேட்டு, இவருடைய மகன் நரசிம்மன், மாம்பழம் தொழில் செய்து வரும் இவர், அதே பகுதியை சேர்ந்த அனிதா என்பவரை ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.

இதற்கிடையில் அனிதாவின் தந்தையான ராஜா என்பவர் தனக்கு சொந்தமான சொத்தை பெரியசாமி என்பவருக்கு அனிதாவின் திருமணத்திற்கு முன்பாக  விற்றுள்ளார். அந்த சொத்தை பெரியசாமியிடம் இருந்து நரசிம்மன் சுமார் 45 லட்சத்திற்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அனிதாவின் தந்தையான ராஜா, தனது சொத்தை மருமகனே வாங்கி விட்டாரே என்ற ஆத்திரத்தில் பலமுறை நரசிம்மன் மற்றும் அவரது மகளான அனிதாவிடம் சொத்தை தன் பெயரில் எழுதி வைக்குமாறு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மருமகனின் மீது தீராத ஆத்திரத்தில் இருந்த மாமனாரான ராஜா, மருமகன் (நரசிம்மன்) குடும்பத்தை    முழுவதுமாக ஒழித்துக் கட்ட முடிவு செய்துள்ளார்.
 
அதன்படு ராஜாவின் மகன்களான யுவராஜ் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரும் , நரசிம்மன் வீட்டில்  சுமார் 20 (ஜலடின்குச்சி) நாட்டு வெடிகுண்டை சமையலறையின் மேல்வைத்து கட்டிவிட்டு 500 மீட்டர் தொலைவில் உள்ள மின்கம்பத்தில் ஒயர் மூலம் கனெக்க்ஷன் கொடுத்துள்ளனர். அப்போது எதோ சத்தம் கேட்பதை அறிந்த நரசிம்மனின் தந்தை அங்கு சென்று பார்த்து அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டுள்ளார். அவரின் சத்தம் கேட்டதும் இருவரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து நரசிம்மனின் தந்தை கந்தலி போலீசாருக்கு தகவல் அளித்தார். பின்னர் அங்கு வந்த போலீசார், சமையலறையில் கட்டப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டை பத்திரமாக மீட்டனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடையை யுவராஜ் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via