சென்னை ஐ.ஐ.டி.யில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று

by Staff / 24-04-2022 02:30:28pm
சென்னை ஐ.ஐ.டி.யில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் இதுவரை 1,420 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று மேலும் 25 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அந்தவகையில் சென்னை ஐ.ஐ.டி.யில் கொரோனா பாதிப்பு 55 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது 256 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். 

தற்போது ‘எக்ஸ்.இ’ வகை கொரோனா பாதிப்பு தமிழகத்தில் இதுவரை யாருக்கும் இல்லை. கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐ.ஐ.டி.யில் 514 பேரை பரிசோதித்ததில் 79 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு மளமளவென அதிகரித்தது. ஆனால் அந்த நிலைமை தற்போது இல்லை. இதற்கு முக்கிய காரணம் அவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.

எனவே தடுப்பூசி செலுத்துவதை விரிவுபடுத்த வேண்டும். தமிழக அரசின் கையிருப்பில் 1.56 கோடி தடுப்பூசிகள் உள்ளன. 1.46 கோடி பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தவில்லை. எனவே தடுப்பூசி செலுத்தாதவர்கள் விரைவாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்தி கொள்ள ஒரே நாளில் மக்கள் அனைவரும் வந்தாலும் நாங்கள் தடுப்பூசி போட தயாராக இருக்கிறோம்.

தற்போது அதிகரிக்கும் கொரோனா பரவல் அனைவருக்கும் எச்சரிக்கை மணி அடித்துள்ளது. எனவே, அனைவரும் கவனமாக இருந்து, அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரி என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். முதல் 3 அலையில் இருந்த பதற்றம் தற்போது தேவை இல்லை.

 

Tags :

Share via