80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு  வீடு தேடிவரும் தடுப்பூசி:  தொலைபேசி எண் அறிவிப்பு

by Editor / 21-08-2021 05:31:53pm
80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு  வீடு தேடிவரும் தடுப்பூசி:  தொலைபேசி எண் அறிவிப்பு


சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் தொற்று பரவலை கட்டுப்படுத்தவும் மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழக மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில், தமிழக அரசு கரோனா தடுப்பூசிகளை அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு முகாம்கள் மூலம் செலுத்தி வருகிறது.
அதனைத் தொடர்ந்து 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று தடுப்பூசி செலுத்த தற்பொழுது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த 044-2538 4520 மற்றும் 044-4612 2300 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்தால், அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via